ஆப்நகரம்

வேட்டையில் சிக்கிய இந்தியர்கள்; மிரட்டிய சீன ராணுவம்; எல்லையில் மீண்டும் பதற்றம்!

சீன ராணுவத்தால் இந்தியர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Samayam Tamil 6 Sep 2020, 7:29 am
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள உப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் சீன - இந்திய எல்லைப் பகுதியில் இருக்கும் நச்சோ வனப்பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று 5 இந்தியர்கள் வேட்டையாடச் சென்றதாக கூறப்படுகிறது. அம்மாவட்ட தலைநகரில் இருந்து நச்சோ பகுதி 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதில் டோச் சிங்கம், பிரசாத் ரிங்லிங், டாங்டு எபியா, டனு பேகர், காரு டிரி ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் டாகில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது அவர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் தப்பி வந்த இருவர் போலீசாரிடம் நடந்தவற்றை விவரித்துள்ளனர்.
Samayam Tamil PLA Kidnap Indians


அதாவது துப்பாக்கி முனையில் அனைவரையும் சீன ராணுவத்தினர் இழுத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில் மாவட்ட தலைநகரான டபோரிஜோவில் வசிக்கும் கடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தியர்களின் உறவினர்கள் நேற்று காலை இந்திய ராணுவத்தைச் சந்தித்து நடந்ததை விவரித்துள்ளனர். தங்கள் குடும்பத்தினரை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு அங்குலம் கூட விடமாட்டோம் - ராஜ்நாத் சிங்கிடம் சீன ராணுவ அமைச்சர் என்ன சொன்னார்?

இதுபற்றி இந்திய ராணுவமோ அல்லது அருணாசலப் பிரதேச அரசோ இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை. இதுபற்றி காவல்துறை எஸ்.பி டரு குஸ்ஸார் கூறுகையில், நச்சோ காவல்நிலைய பொறுப்பு அதிகாரியை சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். கடத்தல் சம்பவம் உண்மைதானா என்று ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பசிகாட் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ நினோங் எரிங், உப்பர் சுபன்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இந்தியர்கள் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீன ராணுவத்தினரின் நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மக்மோகன் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகேவுள்ள அசபிலா செக்டரில் இருந்து 21 வயது இளைஞர் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டார். 19 நாட்களுக்கு பிறகு அந்நாட்டு ராணுவம் அவரை விடுவித்தது. இந்திய - சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் கடந்த சில மாதங்களாகவே தொடர் பதற்றம் நீடித்து வருகிறது. சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் இந்திய ராணுவத்தினர் பலர் வீரமரணம் அடைந்தனர்.

எல்லையில் நிலைமை சீரியஸ் - ராணுவத் தலைவர் அதிர்ச்சித் தகவல்!

இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் தொடர்ந்து வருகிறது.

அடுத்த செய்தி