ஆப்நகரம்

நீண்ட இழுபறிக்கு பின் தேர்வு - புதிதாக தேர்வான மக்களவை காங்கிரஸ் தலைவர் இவர் தான்!

மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் குழுத் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 18 Jun 2019, 2:40 pm
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் தேசிய கட்சியான காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலைப் போன்று, இம்முறையும் 10%க்கு குறைவான இடங்களையே பெற்றுள்ளது.
Samayam Tamil adhir-chowdhury


இதன் காரணமாக இரண்டாவது முறையாக மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்துவிட்டது. இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, மக்களவையில் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். எனவே வேறு யாரை தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஆலோசித்து வந்தது.

இதுதொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில், தலைவர் யார் என்பதற்கான ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மத்தியில் புதிய அரசு பதவியேற்ற பின், முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

இந்த சூழலில் மக்களவையில் காங்கிரஸ் கட்சியை யார் வழிநடத்துவார் என்று கேள்வி எழுந்தது. இதற்காக மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கேரளாவின் கே.சுரேஷ் மற்றும் சசி தரூர், பஞ்சாபின் மணிஷ் திவாரி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரையில் இருந்தன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைக்கு அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில், அதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை காங்கிரஸ் தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அனைத்து முக்கிய தேர்வுக் குழுக்களிலும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி