ஆப்நகரம்

எம்பிக்கள் அமளியும்... மாநிலங்களவை துணைத் தலைவரின் உண்ணாவிரதமும்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.

Samayam Tamil 22 Sep 2020, 6:44 pm
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் அமளியில் ஈடுப்பட்டனர். இதன் எதிரொலியாக எட்டு எம்.பி.க்கள், நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று அதிரடியாக அறிவித்தார். அவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் தொடங்கி, மாநிலங்களவைத் துணைத் தலைவர் உண்ணாவிரதம் வரை இந்த விவகாரத்தின் முக்கிய நிகழ்வுகளை இங்கு சுருக்கமாக காண்போம்.
Samayam Tamil congress said protest against farmers bill 2020 will continue till its revoked
எம்பிக்கள் அமளியும்... மாநிலங்களவை துணைத் தலைவரின் உண்ணாவிரதமும்!


அவையில் பறந்த மைக்குகள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மாநிலங்களவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்ய்பட்டது. விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, இந்த சட்ட மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு மாநிலங்களளை துணைத் தலைவர் செவிசாய்க்காததையடுத்து, ஆத்திரமடைந்த எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள், அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷின் இருக்கைக்கு அருகே சென்று கோஷமிட்டனர். அதன் தொடர்ச்சியாக அவர்கள், அவைத் தலைவருக்கு முன்பிருந்த மைக்குகளை பிடுங்கி எறிந்தனர். அவைக் குறிப்பு புத்தகங்களை கிழித்து வீசினர். இதன் காரணமாக மாநிலங்களவையில் பெரும் பரப்பு ஏற்பட்டது.

சஸ்பெண்டும், விடிய விடிய தர்ணாவும்

அவையின் விதிமுறைகளை மீறி, அநாகரிமாக நடந்து கொண்டதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சத்தவ், ரிபுன் போரா, சையது நசீர் உசேன், திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரைன், டோலா சென், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.கே. ராகேஷ், எலமாரோம் கரீம் ஆகிய எட்டு எம்.பி.க்களை, நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை எனக் கூறி, எம்.பி.க்கள் எட்டு பேரும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று விடிய விடிய தர்ணா போராட்டத்தை மேற்கொண்டனர்.

தேநீர் விநியோகமும், உண்ணாவிரதமும்

நாடாளுமன்ற வளாகத்தில் விடிய, விடிய தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களை சமாதானம் செய்து முயற்சியாக, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ், இன்று அதிகாலை நேரில் சென்று தேநீர் விநியோகம் செய்தார். ஆனால் அவர் அளித்த தேநீரை பருக மறுத்த எம்.பி.க்கள், தங்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும்வரை தங்களது தர்ணா போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையின் மரியாதையை குறைக்கும் விதத்தில் நடந்துக் கொண்ட எம்.பி.க்களை கண்டிக்கும் விதமாக தான் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவதாக, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்தார். இதுதொடர்பாக அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஹரிவன்சின் உண்ணாவிரத நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து, தாமும் இன்று உண்ணாவிரதம் மேற்கொள்வதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அதிரடியாக அறிவித்தார்.

மன்னிப்பு கேட்டால் அதன் பிறகு பார்க்கலாம்

மாநிலங்கவையின் கண்ணியத்தை குலைக்கும் விதத்தில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்ட எம்.பி.க்கள், தங்களது இந்த செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர்கள் மன்னிப்பு கோரும் பட்சத்தில், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை

மாநிலங்களவை துணைத் தலைவர் தான் அவை விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளார். எனவே, எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் பதிலளித்துள்ளார். அத்துடன் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யும் வரையிலும், விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக விளைப்பொருள்களை கொள்முதல்

செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது போன்ற விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள வேளாண் மசோதாக்களில் திருத்தம் மேற்கொள்ளும் வரையும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும் என்றும் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி