ஆப்நகரம்

சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கத்துக்கு எதிராக சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 26 Oct 2018, 12:39 pm
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil DqaWTbkWkAAIDPh
சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!


ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.


இதனிடையே ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. மேலும் அலோக் வர்மா நீக்கியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தது.

அதன்படி, இன்று நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு கூடிய காங்கிரஸ் கட்சியினர் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கியதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸூம் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.



சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சிபிஐ அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் புதுச்சேரியில் முதல்வர் நாரயணசாமி தலைமையில் சிபிஐ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பெங்களூருவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரசார், முகமூடி அணிந்தும், கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பாட்னாவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பும் ஏராளமான காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் காரணமாக சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி