ஆப்நகரம்

குறையும் பலி எண்ணிக்கை: கொரோனா மீட்பில் இந்தியா புதிய நம்பிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 25 Oct 2020, 6:51 pm
உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொற்றானது கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இதற்கு Severe acute respiratory syndrome (SARS) கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எனினும், தடுப்பு மருந்து கண்டுபிடித்து சந்தைக்கு வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என தெரிகிறது.
Samayam Tamil coronavirus india update death toll is reducing
குறையும் பலி எண்ணிக்கை: கொரோனா மீட்பில் இந்தியா புதிய நம்பிக்கை!



கொரோனா எப்போது குறையும்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், கொரோனாவின் தாக்கம் குறைந்த பாடில்லை. இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நம்பிக்கையில் இந்தியா

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78.64 லட்சமாக உயர்ந்துள்ளது. தினமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அதைவிட அதிக நபர்கள் குணமடைந்து வருகின்றனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்து வருகிறது. தினமும் 1,000க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக உயிரிழப்பு எண்ணிக்கை 1000க்கு கீழ் குறைந்துள்ளது.

விழிப்புணர்வு தேவை

முன்னதாக, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு குறைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களை காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு, விநியோகிக்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசுகளும், மருத்துவ வல்லுநர்களும் அறிவுத்தியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவை பொறுத்தவரை, மூன்று நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி பரிசோதிக்கும் முக்கிய கட்டத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள் தற்போது உள்ளன. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியை மக்களுக்கு விநியோகிக்க தேவையான திட்டத்தை அரசு வடிவமைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி