ஆப்நகரம்

ஆட்சியை பிடிக்கப் போவது யார்? பரபரப்பான டெல்லி- இன்று வாக்கு எண்ணிக்கை!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Samayam Tamil 11 Feb 2020, 7:49 am
70 உறுப்பினர்கள் கொண்ட தற்போதைய டெல்லி சட்டமன்றத்தின் காலம் வரும் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 672 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
Samayam Tamil Delhi Election


ஆளும் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் கடந்த தேர்தலில் வரலாறு காணாத அளவில் 67.47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன. அதாவது 10 முதல் 16 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்லுக்கு கல், கத்திக்கு கத்தி; உச்சக்கட்ட கோபத்தில் ராஜ் தாக்கரே - ஏன் இந்த அதிரடி...?

வாக்குப்பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் முடிவுகள் இன்று பிற்பகலுக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் ஏதும் நடக்காவண்ணம் ஆம் ஆத்மி கட்சியினர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு வீரர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை போட்டுத் தாக்கிய மோசமான வானிலை - 2019ன் ஷாக் ரிப்போர்ட் வெளியானது!

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களை பெற்றது. பாஜக வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வென்றது. அதேசமயம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது.

இம்முறை பாஜக தலைவர்கள் மிகத் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பல்வேறு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி பாஜக பொறுப்பாளர் மனோஜ் திவாரி, எனக்கு எந்தவித பதற்றமும் இல்லை.

மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். பாஜகவிற்கு நல்ல நாளாக இது அமையும். டெல்லியில் இன்று நாங்கள் ஆட்சியை பிடிக்கப் போகிறோம். பாஜக 55 இடங்களை வென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி