ஆப்நகரம்

ஒரு மணி நேரத்திற்கு 4 பேர் காலி; பதற்றத்தைக் கூட்டும் கொரோனா!

தலைநகரில் கொரோனா பலி குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 16 Nov 2020, 12:36 pm
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தலைநகர் டெல்லியிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு முதல் வைரஸ் தொற்று கடந்த மார்ச் 2ஆம் தேதி கண்டறியப்பட்டது. அந்த மாதம் கொரோனாவிற்கு இருவர் உயிரிழந்தனர். அதன்பிறகு நாளொன்றுக்கு இருவர் என பலி எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மே மாதத்தில் 414ஆக எகிறியது. இது தினசரி சராசரி 13.3 என்ற நிலைக்கு கொண்டு சென்றது. ஜூன் மாதத்தில் தான் கொரோனாவின் முதல் அலையை டெல்லி காணத் தொடங்கியது. அந்த மாதத்தில் மட்டும் 2,269 பேர் உயிரிழந்துள்ளனர். இது தினசரி 75.6 மரணங்களுக்கு சமம்.
Samayam Tamil Coronavirus in Delhi


அதன்பிறகு ஜூலை மாதம் தினசரி சராசரி 39.3ஆகவும், ஆகஸ்ட்டில் 15.5ஆகவும் சரிந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் கொரோனா பலி அதிகரிக்கத் தொடங்கியது. இம்மாதத்தில் 917 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி சராசரி 30.5 ஆகும். அதுவே அக்டோபரில் சராசரி 37ஆக அதிகரித்தது. டெல்லியில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஒரு மணிநேரத்திற்கு 4 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி இருக்கின்றனர்.

நேற்றைய தினம் மட்டும் 95 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது அம்மாநிலத்தின் மூன்றாவது அதிகபட்ச உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு மாதத்தில் மட்டும் 1,103 பேர் கோவிட்-19 பாதிப்பால் பலியாகி இருக்கின்றனர். இது ஒவ்வொரு நாளும் சராசரியாக 73.5 பேரின் மரணத்திற்கு சமம். நடப்பு வாரத்தை கவனிக்கையில் ஒவ்வொரு நாளும் 90 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நெருக்கடியிலும் அதிரடி சம்பள உயர்வு; அசத்திய மாநில அரசு!

அதில் கடந்த வியாழன் அன்று புதிய உச்சமாக 104 பேர் பலியாகிவிட்டனர். இதன்மூலம் டெல்லியின் மொத்த கொரோனா உயிரிழப்புகள் 7,614ஆக அதிகரித்துள்ளது. அதுவே பலி விகிதத்தை எடுத்துக் கொண்டால் 1.5 சதவீதமாக இருக்கிறது. இதுபற்றி டெல்லியைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு நபரையும் காப்பாற்ற முடிந்தவரை போராடுகிறோம். எங்களால் முடிந்த சிறப்பாக சிகிச்சையை அளிக்கிறோம்.

ஆனால் பல்வேறு சமயங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமடைந்த பின்னரே மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது எங்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி