ஆப்நகரம்

பெண்ணைத் துன்புறுத்திய போலீஸ் மகன், வீடியோ எடுத்து ரசித்த நண்பன்!

டெல்லியில் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் ஒரு பெண்ணை அடித்துத் துன்புறுத்த, அதனை அவரது நண்பர் வீடியோவாகப் பதிவுசெய்துள்ளார்!

Samayam Tamil 14 Sep 2018, 4:04 pm
டெல்லியில் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் ஒரு பெண்ணை அடித்துத் துன்புறுத்த, அதனை அவரது நண்பர் வீடியோவாகப் பதிவுசெய்துள்ளார்!
Samayam Tamil frarvc1o_woman-beaten-up_625x300_14_September_18


டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் ரோஹித் சிங் தோமர். இவர் ஒரு பெண்ணை தன் நண்பர் பணிபுரியும் தனியார் அலுவலகம் ஒன்றுக்கு அழைத்துள்ளார். அங்கு ரோஹித் அந்தப் பெண்ணை சிறிதும் இரக்கமின்றி கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனை ரோஹித்தின் நண்பர் வீடியோவாகப் பதிவுசெய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துபறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

வீடியோ எடுத்த நண்பர் ஒரு கட்டத்தில் “ரோஹித் நிறுத்து. போதும்…” என்று சொல்கிறார். ஆனால், அதைக் கேட்காமல் அவர் தொடர்ந்து அந்தப் பெண்ணைத் தாக்கிக்கொண்டே இருக்கிறார். யாரும் ரோஹித்தை தடுக்கவில்லை.

இந்த வீடியோ செப்டம்பர் 2ஆம் தேதி எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், இச்சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் உட்பட யாரும் புகார் அளிக்க முன்வராத நிலையில், ரோஹித்தை திருமணம் செய்துகொள்ள இருந்த பெண் ஒருவர் நேற்று உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட பெண்ணும் தன் தரப்பில் புகார் கொடுத்திருக்கிறார். ரோஹித் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் தான் போலீஸில் புகார் அளிப்பதாகச் சொன்னதும் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும் தன் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித் குறித்து முதலில் புகார் கொடுத்த, அவரைத் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண் அவருடன் நடக்க இருந்த திருமணத்தை ரத்துசெய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி