ஆப்நகரம்

திடீர் திருப்பம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்? - ராஜஸ்தான் களநிலவரம் இதோ!

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் நிகழ்த்தி ஆட்சி மாற்றத்திற்கு பாஜக வித்திட்டு வரும் நிலையில் ராஜஸ்தானிலும் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதா என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 12 Jul 2020, 4:29 pm
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெஹ்லாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே முதலமைச்சர் அசோக் கெஹ்லாத் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை கவிழ்க்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil Ashok Gehlot and Sachin Pilot


லேட்டஸ்ட் களநிலவரம் என்ன?

* துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் பாஜகவுடன் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

* இந்த சூழலில் இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கட்சியின் நிலை மிகவும் கவலையளிக்கிறது. நமது கூடாரத்தில் இருந்து அனைத்து குதிரைகளும் வெளியேறிய பின்னர் தான் நாம் கவலை கொள்வோமா?” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

என் கட்சியை நினைச்சா... ராஜஸ்தான் அரசியல் சூழலால் கலங்கிய கபில் சிபல்!

ராஜஸ்தான் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது?

* ராஜஸ்தானில் குதிரை பேரம் நடத்தி ஆளுங்கட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி மாநில போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் அரசின் தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

* இதுபற்றி ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பட்டு குழு கூறுகையில், கடந்த ஜூன் மாதம் ஆயுத பேர வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரித்து வந்தோம். அப்போது இருவரின் தொலைபேசி உரையாடல்களை கேட்ட போது பல்வேறு அதிர்ச்சிகர விஷயங்கள் தெரியவந்துள்ளன. அதில், கெஹ்லாத் அரசை கவிழ்க்க பாஜக திட்டம் தீட்டப்பட்டு வருவதாக இருவரும் பேசிக் கொண்டதாக கூறினர்.

* இதன் தொடர்ச்சியாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கெஹ்லாத், எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு மிகப்பெரிய தொகையைக் கொடுத்து ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது. எங்கள் ஆட்சி நிலையாக இருக்கும். நிச்சயம் 5 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்றார்.

* இந்த சூழலில் குதிரை பேரம் நடத்துவதாக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டுமாறு கெஹ்லாத்திற்கு பாஜக தரப்பு சவால்விட்டுள்ளது. அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்றும் எச்சரித்துள்ளது. உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல் எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டை முன்வைப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

எப்படி சிக்கினார் ஸ்வப்னா? கேரள தங்கக் கடத்தல் வழக்கின் பின்னணி!

ராஜஸ்தான் சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் நிலவரம்:

* மொத்தமுள்ள 200 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு 106 பேர் இருக்கின்றனர். இதில் கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 6 பேரும் அடங்குவர். மேலும் 13 சுயேட்சை எம்.எல்.ஏக்களில் 12 பேரின் ஆதரவு காங்கிரஸிற்கு இருந்தது. இதில் 3 பேர் இன்று காலை தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதைத்தவிர 2 பழங்குடியின எம்.எல்.ஏக்கள், 1 ராஷ்டிரிய ஜனதா தள் எம்.எல்.ஏ, 2 சிபிஎம் எம்.எல்.ஏக்கள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றனர். மறுபுறம் பாஜகவிற்கு 72 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களுக்கு ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

* சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் மற்றும் மூன்று சுயேட்சை எம்.எல்.ஏக்கள் டெல்லியின் பல்வேறு ஓட்டல்களில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆளும் காங்கிரஸ் அரசிற்கு மேற்குறிப்பிட்ட 25 எம்.எல்.ஏக்களும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டால் ஆட்சி செய்ய தேவையான பெரும்பான்மை 88ஆக குறையும். ஆனால் அப்போதும் பாஜகவிற்கு 72 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பர். இதனால் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. இருப்பினும் எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் எதையும் நிகழ்த்திக் காட்டலாம். ராஜஸ்தானில் நிகழும் அடுத்தடுத்த அரசியல் அதிரடிகளைத் தெரிந்து கொள்ள ”சமயம் தமிழ்” உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

அடுத்த செய்தி