ஆப்நகரம்

சர்வதேச விமானங்களுக்கு தடை நீட்டிப்பு!

சர்வதேச விமானங்களுக்கு நவம்பர் 30ஆம் தேதி வரை மத்திய அரசு தடையை நீட்டித்துள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 10:04 pm

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதியன்று நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சர்வதேச விமானங்களுக்கும், விமானப் போக்குவரத்துக்கும் மத்திய அரசு தடை விதித்தது.
Samayam Tamil Flights


இதன்பின்னர் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. ஆனால், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மட்டும் தடை நீடித்து வந்தது.

இந்நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், அரசு மேற்கொண்ட ஏற்பாடுகளின்படி குறிப்பிட்ட சில இடங்களுக்கு பயணிக்கும் விமானங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா

அரசு அனுமதி பெற்ற விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அன்லாக் 5 பொதுமுடக்கம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை ஏராளமான இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்துவந்துள்ளது. இதுபோக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உடன்படிக்கைகளின்படி இந்தியாவில் இருந்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு விமானங்கள் பயணிக்கும். உள்நாட்டு விமானங்கள் மே 25ஆம் தேதி முதல் இயங்க மத்திய அரசு அனுமதியளித்தது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி