ஆப்நகரம்

Mumbai Corona Cases: கொரோனாவை ஓட ஓட விரட்டும் தாராவி; நேற்று ஒரேநாளில் நடந்த ஆச்சரியம்!

மிகப்பெரிய குடிசைப் பகுதியாக கருதப்படும் தாராவியில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

Samayam Tamil 9 Oct 2020, 11:55 am
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தாராவி அமைந்துள்ளது. இங்கு நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள சிறிய வீடுகளில் சுமார் 6.5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாராவி பகுதியையும் விட்டு வைக்கவில்லை. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்முறையாக இங்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதுவும் மக்கள் நெருக்கமாக வசித்து வருவதால் வேகமாக வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டனர்.
Samayam Tamil Dharavi Model


மே மாதத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு ஜூலை மாதம் 20 சதவீத அளவிற்கு குறைந்தது. தாராவியில் உள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை செய்யும் நடவடிக்கையில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அறிகுறிகள் தென்படுபவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி பிறருடன் நெருங்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர்.

இதனால் தாராவியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இந்தியாவிற்கே மாதிரியாக விளங்கும் “தாராவி மாடல்” என கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரபலமானது. இந்நிலையில் 12 நாட்களுக்கு பிறகு நேற்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதாவது புதிதாக 8 பேருக்கு மட்டும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாராவியில் இப்படி அசத்திட்டீங்க; ஆச்சரியத்தில் வாயடைத்து போன மத்திய அரசு!

இதன்மூலம் வைரஸ் தொற்று பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. தாராவியில் தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 3,300ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2,820 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 187 தாராவி மக்கள் மட்டும் கொரோனா நோய்த்தொற்றை ஒட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் மும்பை தாராவியில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட செயல்பாடுகள், ஒத்துழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் இதனை சாத்தியப் படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி