ஆப்நகரம்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் துஷ்யந்த் சவுதாலா!!

ஹரியானாவில் 10 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு தற்போது தோள் கொடுக்க முடிவு எடுத்து இருக்கும் ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா தனது தாய்க்கு துணை முதல்வர் பதவி கேட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Oct 2019, 4:37 pm
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் இந்த முறை வித்தியாசமான முடிவுகளைக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியும், பாஜகவுக்கு சரிவும் ஏற்பட்டுள்ளது. புதிய இளம் தலைவராக துஷ்யந்த் சவுதாலா உருவாகியுள்ளார்.
Samayam Tamil Naina


ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் அஜய் சவுதாலா. இவரது மகன் துஷ்யந்த் சவுதாலா. தற்போது சிறையில் இருக்கிறார் அஜய் சவுதாலா. முதல்வராக ஓம் பிரகாஷ் இருந்தபோது, ஹரியானாவில் ஆசிரியர் பணிக்கு அமர்த்தியதில் லஞ்சம் பெற்றதாக ஓம் பிரகாஷூடன் கைது செய்யப்பட்டு அஜய் திகார் சிறையில் வைக்கப்பட்டார்.

தற்போது தந்தை ஓம் பிரகாஷ், அஜய் இருவரும் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஓம் பிரகாஷ் கையில் இருந்து அஜய் சவுதாலாவின் சகோதரர் அபய் சவுதாலா கைக்கு சென்றது.

ஏற்கனவே சகோதர்களுக்கு இடையே புகைச்சல் இருந்து வந்த நிலையில் கடந்தாண்டு இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இருந்து துஷ்யந்த் அவரது சகோதரர் திஜ்விஜய் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து ஜனநாயக ஜனதா கட்சியை துஷ்யந்த் துவக்கினார். இதற்கு முன்னதாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இளம் எம்.பி., என்ற பெயர் பெற்று லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றார்.

தாத்தாவின் இடத்தைப் பிடிப்பாரா ஆதித்ய தாக்கரே... குவியும் போஸ்டர்கள்!!

தற்போது 31 வயதாகும் துஷ்யந்த் ஹிசார் தொகுதி எம்.பி.,யாக இருக்கிறார். ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் இவரது கட்சி போட்டியிட்டது. 10 இடங்களில் வெற்றி பெற்று கிங் மேக்கராக உருவானார்.

வெற்றியும் பின்னடைவும்: தப்பும் பாஜகவின் மாநிலங்களவை கணக்கு

இவரது தாயும் அஜய் சவுதாலாவின் மனைவியுமான நைனா சவுதலா பத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை துணை முதல்வராக்கும் முயற்சியில் துஷ்யந்த் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துஷ்யந்த் எம்.பி.,யாக இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது தந்தை அஜய் சுவுதாலா இரண்டு வாரங்கள் விடுப்பில் திகார் சிறையில் இருந்து வெளியே வர இருப்பதகாவும் செய்தி வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை அஜய் வெளியே வரலாம்.

வெற்றி பெற்றது 10 இடங்கள்தான் என்றாலும், பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதுடன், தனது ஆசைகள் அனைத்தையும் துஷ்யந்த் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார் என்றே தெரிகிறது.

அடுத்த செய்தி