ஆப்நகரம்

மத்திய பட்ஜெட் 2020 இனிக்குமா? கசக்குமா? இன்று தொடங்குகிறது கூட்டத்தொடர்!

நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

Samayam Tamil 31 Jan 2020, 8:09 am
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குகிறது. இதில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்.
Samayam Tamil economic survey to be presented in today budget session 2020
மத்திய பட்ஜெட் 2020 இனிக்குமா? கசக்குமா? இன்று தொடங்குகிறது கூட்டத்தொடர்!


பட்ஜெட் கூட்டத்தொடர் 2020

நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, அனைத்து பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

போராட்டக் களமான இந்தியா

இந்த சூழலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான எதிரான போராட்டங்கள், பொருளாதார மந்த நிலையில், காஷ்மீரில் தலைவர்கள் சிறைவைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதால், இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று பல எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் மோடி உறுதி

இதுகுறித்து பதிலளித்த பிரதமர் மோடி, இந்தியாவிற்கு சாதகமான முறையில் பொருளாதாரத்தை மாற்றலாம். அதுபற்றி ஆரோக்கியமான விவாதத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது.

குடியரசு தலைவர் உரை

இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அவர் அரசின் கொள்கைகளையும், முக்கிய திட்டங்களையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பட்ஜெட் தாக்கல்

இந்த அறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மத்திய பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார். இது இவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் எதிர்பார்ப்பு

இந்த பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொழில்துறையினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு திட்டம்

அதேசமயம் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நடப்பு பட்ஜெட்டிற்காக பொதுமக்களிடம் இருந்து 19 ஆயிரம் பரிந்துரைகள் நிதியமைச்சருக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி