ஆப்நகரம்

EIA2020: வரைவை பிராந்திய மொழிகளிலும் வெளியிடலாமே? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீ்ட்டு வரைவு அறிவிக்கை பிராந்திய மொழிகளில் வெளியிடப்படாத விவகாரத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 13) உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 13 Aug 2020, 8:54 pm
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை 2020ஐ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. பொதுமக்களின் கருத்தை கேட்கும் நோக்குடன் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை தொடர்பாக, நாடு முழுவதும் மொத்தம் 20 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.
Samayam Tamil sc


இந்த நிலையில், இந்த வரைவு அறிவிக்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பிராந்திய மொழிகளிலும் இதனை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை 22 பிராந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு: எவ்வளவு லட்சம் பேர் கருத்து சொல்லியிருக்காங்க தெரியுமா?

இந்த உத்தரவு செயல்படுத்தப்படாததையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஏன் எடுக்கக்கூடாது எனக் கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதனை எதிர்த்து, சுற்றுச்சூழவ் அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

EIA2020: இது வரைவுதான்... மாற்றங்கள் செய்யப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

அப்போது, "சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம், அமைச்சகங்களின் வரைவு அறிவிக்கைகளை பிராந்திய மொழிகளிலும் வெளியிட வழிவகை செய்வதற்கு வசதியாக, அரசமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, "அமைச்சகங்களின் வரைவு அறிவிக்கைகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும்தான் வெளியிட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தமது வாதத்தின்போது எடுத்துரைத்தார்.

அடுத்த செய்தி