ஆப்நகரம்

என்னய்யா அப்படியே காப்பி அடிச்சுருக்கீங்க: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவரை நாட்டின் நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

Samayam Tamil 15 Nov 2019, 4:08 pm
டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் ஜாமின் மனுவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் காப்பி-பேஸ்ட் செய்துள்ளதாக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி!

சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படாலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவரது ஜாமின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, தனக்கு ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

ஆட்சி கவிழ காரணமாக இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏக்களுக்கு பாஜக வெகுமதி!

இதனிடையே, கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார், பண மோசடி வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தனக்கு ஜாமின் கோரி சிவக்குமார் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, சுமார் 50 நாட்களுக்கு பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியேறினார்.

டி.கே.சிவக்குமார்


எனினும், சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதிகள் நரிமன் மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் உள்ள வாதங்களை மாற்றாமல் அப்படியே காப்பி-பேஸ்ட் செய்து டி.கே.சிவக்குமாரது வழக்கில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சிவக்குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை உறுதிபடுத்தியும் உத்தரவிட்டுள்ளனர்.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு


அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவரை நாட்டின் நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சி கவிழ்ப்புக்கு முன்னர் எம்.எல்.ஏவாக இருந்த சிவக்குமார், கர்நாடக மாநில நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்த்க்கது.

அடுத்த செய்தி