ஆப்நகரம்

நாளை முதல் 10 நாட்கள் போராட்டம்; நாட்டையே திரும்பி பார்க்க வைக்க விவசாயிகள் முடிவு!

விவசாயிகள் 10 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Samayam Tamil 31 May 2018, 2:09 pm
மும்பை: விவசாயிகள் 10 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
Samayam Tamil Farmers Protest


நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை, அரசின் மோசமான விவசாயக் கொள்கை, அயல்நாட்டவரிடம் விவசாயத்தை வசப்படுத்தும் நடவடிக்கை உள்ளிட்டவற்றை கண்டித்து, நாடு தழுவிய போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இதில் அனைத்து விவசாய அமைப்புகளும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். வரும் ஜூன் 1(நாளை) முதல் 10ஆம் தேதி வரை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய பாரதிய கிஷான் சங்கத்தினர், மத்திய அரசின் தவறான கொள்கையால் 4 ஆண்டுகளில் மட்டும் 20,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் இதனை மூடி மறைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, அரசுகள் அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. எனவே மீண்டும் ஒரு போராட்டத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளோம்.

இம்முறை மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். வேளாண் துறையில் தன்னிறைவு பெறுவதை அரசு உறுதி செய்யவில்லை.

ஆனால் விவசாய உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் இறங்குவதை மோடி அரசு ஊக்குவித்து வருவதாக கூறினர்.

விவசாயக் கடன் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குதல், உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறிவித்தல், இயற்கை முறை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8,000 உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் தாங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Farmers calls 10 days strike over India.

அடுத்த செய்தி