ஆப்நகரம்

நடுவானில் பரபரப்பு: டாய்லெட் என்று நினைத்து விமானத்தின் மெயின் டோரை திறக்க முயன்ற பயணி!

நடுவானில் விமானத்தின் மெயின் டோரை திறக்க முயன்ற வாலிபரால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட நேரிட்டது

Samayam Tamil 24 Sep 2018, 5:15 pm
டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு சென்ற விமானத்தில், டாய்லெட் என்று நினைத்து மெயின் டோரை திறக்க முயன்ற பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil flight


கடந்த சனிக்கிழமையன்று தலைநகர் டெல்லியிலிருந்து பாட்னா நோக்கி கோஏர் (GoAir) நிறுவனத்தின் G8 149 என்ற விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அதில், பாட்னாவைச் சேர்ந்த பயணி ஒருவர் முதன்முதலாக விமானப்பயணம் மேற்கொண்டார். முதல் பயணம் என்பதால், அவருக்கு விமானத்தில் உள்ள நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் பற்றி அதிகம் தெரியவில்லை.

இந்நிலையில், நடுவானில் விமானம் சென்று கொண்டிருக்கும் போது கழிப்பறை செல்வதற்காக எழுந்த அந்த பயணி, தவறுதலாக விமானத்தின் மெயின் கதவை திறக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள், கூச்சல்போட்டு அவரை தடுத்தனர். ஆனால், சூழ்நிலை புரியாத அந்த பயணி, மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் கதவை திறக்க முயன்றுள்ளார். இதையடுத்து விமானப் பணியாளர்கள் வந்து அவரை தடுத்து நிறுத்தி, கழிப்பறைக்கு அனுப்பினர்.

இருந்தபோதிலும், அவரது செயல் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் வகையில் அமைந்ததால், விமானம் தரையிறங்கியதும் அவரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். நடுவானில் விமானத்தின் மெயின் டோரை திறக்க முயன்ற இந்த சம்பவம், பயணிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அடுத்த செய்தி