ஆப்நகரம்

Kerala Flood: யார் என்பதை சொல்லாமல் கேரளமக்களுக்கு உதவிய கலெக்டர்!!

கேரளாவில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஒருவர், தான் யார் என்பதை வெளியில் சொல்லாமல் உதவி செய்துள்ளார்.

Samayam Tamil 6 Sep 2018, 10:43 am
கேரளாவில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஒருவர், தான் யார் என்பதை வெளியில் சொல்லாமல் உதவி செய்துள்ளார்.
Samayam Tamil யார் என்பதை சொல்லாமல் கேரளமக்களுக்கு உதவிய கலெக்டர்!!
யார் என்பதை சொல்லாமல் கேரளமக்களுக்கு உதவிய கலெக்டர்!!


கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர, பல இடங்களில் நிலச்சரிவு உண்டானது. இவற்றில் சிக்கி சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கேரளாவுக்கு செய்து வருகின்றனர். இதுதவிர, பல தன்னார்வ அமைப்புகளும் தங்களால் முடிந்த உதவிகளை கேரளாவுக்கு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், யூனியன் டெரிடோரியான தத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கேரளா வெள்ளப்பாதிப்பிற்கு ரூ.1 கோடி நிதியுதவி செய்துள்ளது. இந்தத் தொகையை, அதன் மாவட்ட ஆட்சியரும் கேரளாவைச் சேர்ந்தவருமான கண்ணன் கோபிநாதன், ஆகஸ்ட் 26 ஆம் தேதி கேரள மாநில முதல்வருக்கு நேரில் வந்து அளித்துள்ளார்.

அதன்பின், அவர் அங்கிருந்து பஸ் ஒன்றில் ஏறி, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள செங்கனூர் பகுதிக்குச் சென்று அங்குள்ள நிவாரண முகாம்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுள் ஒருவராக இருந்து உதவி செய்துள்ளார். இதுமட்டுமில்லாமல்,அங்கு வரும் நிவாரணப் பொருட்களை சுமந்து செல்தல், அதை அனைவருக்கும் வழங்குதல் என, ஒரு கலெக்டர் என்ற சிறு துளி அதிகாரம் இல்லாமல் செயல்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நிவாரண முகாம்களுக்கு வந்த சில சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் செய்யும் செயல்களைப் பார்த்து வியந்து போனார்கள்.

தொடர்ந்து 8 நாட்களாக நிவாரண முகாம்களில் உதவி செய்து வந்த கலெக்டர் கண்ணன், மீண்டும் பணிக்குத் திரும்பும்போது, கேரளாவில் பணியாற்றியதை விடுப்பாக விண்ணப்பித்துள்ளார். ஆனால், அது அவரின் நிர்வாக பணியாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அலுவலக நேரத்தில் ஈடுசெய்யப்பட்டது.

இப்போதெல்லாம், ஒரு சில கலெக்டர்கள் விளம்பரத்திற்காக பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர் எவ்வித விளம்பரமும் இல்லாமல், தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கேரளாவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், அவரிடம் பேட்டியெடுக்கச் சென்ற நிருபர்களிடம் “எனக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். இங்கே உண்மையான ஹீரோக்கள் பாதுகாப்புப் படை வீரர்கள்தான்” என தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

அடுத்த செய்தி