ஆப்நகரம்

மிரட்டும் தொனியில் பிரதமர் பேசுகிறார்: ஜனாதிபதிக்கு மன்மோகன் கடிதம்!!

''பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி தலைவர்களை அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் தொனியில் பேசுவதை நிறுத்த வேண்டும். அப்படி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல'' என்று ஜனாதிபதிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Samayam Tamil 14 May 2018, 3:36 pm
''பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி தலைவர்களை அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் தொனியில் பேசுவதைநிறுத்த வேண்டும். அப்படி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல''என்று ஜனாதிபதிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
Samayam Tamil 63844005


கர்நாடக தேர்தல் கடந்த மே 12 ஆம் தேதி நடைபெற்றது.இதை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். பரப்புரையின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ‘கர்நாடகாவில் வெயிலை கூடத்தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் ராகுல் காந்தியை தாங்கிக் கொள்ள முடியாது'' என்று பேசி இருந்தார்.

இதைத்தொடர்ந்து , ராஜீவ் காந்தி காலத்தில் இருந்து விவசாயிகளை காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது என்று குற்றம்சாட்டி இருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கும்பட்சத்தில் பிரதமர் ஆவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார். இதை கடுமையாக பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், ''காங்கிரஸ் தலைவர்களை பிரதமர் மோடி அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் தொனியில் பேசுவதை நிறுத்த வேண்டும்'' என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில், ''ஹூப்ளியில் நடந்த பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பேசியது மிரட்டும் தொனியில் இருந்தது. இந்த தொனியில் காங்கிரஸ் தலைவர்களை மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சித்தலைவர்களை பிரதமர் பேசுவதை நிறுத்த வலியுறுத்த வேண்டும். இது பிரதமர் வகிக்கும் பதவிக்கு மாண்பு அல்ல. அரசியல் அமைப்புச் சட்டத்தில் உயர் பதவி வகிக்கும் ஜனாதிபதிதான் பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்களைக் கண்டிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அடுத்த செய்தி