ஆப்நகரம்

பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி - இறுதிச் சடங்கு எப்போது?

உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

Samayam Tamil 1 Sep 2020, 10:52 am
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், பின்னாளில் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தவர் பிரணாப் முகர்ஜி. இவர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேநாளில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆழ்ந்த கோமா நிலைக்குச் சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Samayam Tamil Pranab Mukherjee


இதனை அவரது மகன் அபிஜித் பானர்ஜி ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து, நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் இருந்து இன்று காலை 8 மணியளவில் பிரணாப் முகர்ஜியின் உடல் அவரது அரசு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இவரைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

கிராமத்து பையன் முதல் குடியரசுத் தலைவர் வரை... உச்சம் தொட்ட பிரணாப் முகர்ஜி!

தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வருகை புரிய உள்ளனர். இதையடுத்து 11 மணி முதல் 12 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர். பிற்பகல் 2 மணியளவில் லோதி சாலையில் உள்ள மயானத்தில் பிரணாப் முகர்ஜிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

அடுத்த செய்தி