ஆப்நகரம்

அமைச்சரை மட்டும் குற்றம் சொன்னா எப்படி? ப.சி.க்கு வக்காலத்து வாங்கும் மன்மோகன் சிங்

நமது அரசு நிர்வாகத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் என கூட்டாக ஒரு முடிவு எடுக்கும்போது, அதில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அமைச்சர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவது சரியா? என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 24 Sep 2019, 4:58 pm
ஐ.என். எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தன.
Samayam Tamil fpm


இந்த வழக்கில் கைது செய்யப்படாமலிருக்க, ப.சிதம்பரம் பலமுறை ஜாமீன் பெற்று வந்தார். இந்த நிலையில், விசாரணைக்கு அவர் சரியாக ஒத்துழைப்பு தராததால், மேற்கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, சிதம்பரத்துக்கு கடந்த மாதம், டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 21 -ஆம் தேதி (ஆகஸ்ட் 21) சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. தற்போது திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேற்று நேரில் சந்தித்தனர்.

வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல மாட்டேன்; ஜாமீன் கொடுங்க - உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்!


அதைத்தொடர்ந்து மன்மோகன் சிங் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " நமது அரசு நிர்வாக நடைமுறையில், தனியொரு நபராக யாரும் எந்த முடிவும் எடுப்பதில்லை. துறை அதிகாரிகள், அமைச்சர்கள் என கூட்டாக தான் எந்தவொரு முடிவும் எடுக்கப்படுகிறது. அத்துடன் நிர்வாகரீதியிலான எல்லா நடைமுறைகளும் ஆவணப்படத்தவும் படுகின்றன.

நடைமுறை இப்படியிருக்க, ஓர் விஷயத்தில் தவறு நடைபெற்றுள்ளதாகக் கூறி, துறை அமைச்சராக இருந்தவர் மீது குற்றம் சுமத்தப்படும்போது, துறை அதிகாரிகளை வசதியாக விட்டுவிடுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

அதிகாரிகளின் பரிந்துரைகளை ஏற்றுதானே திட்டங்களுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்கின்றனர். அப்படியிருக்கும் போது ஏதேனும் தவறு நிகழ்வதாக சொல்லப்படும்போது, அதற்கு அமைச்சர்களை மட்டுமே பொறுப்பாக்குவது நம் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை சிதைத்துவிடும்.

திகார் சிறையில் ப.சிதம்பரம் எப்படி இருக்கிறார்? சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு!

ப.சிதம்பரம் சம்பந்தப்பட்ட வழக்கில், ஒரு டஜன் அதிகாரிகள் பரிசீலித்து, பரிந்துரை அளித்தன் பெயரில் தான் அமைச்சர் என்ற முறையில் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இவ்வழக்கில் அவர் மீது மட்டும் குற்றம்சுமத்தி, தொடர்ந்து அவரை சிறையில் வைத்திருப்பது கவலை அளிக்கிறது. நீதிமன்றத்தில் அவருக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்" என தமது அறிக்கையில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி