ஆப்நகரம்

இலவச தரிசன டோக்கன் மேலும் அதிகரிப்பு: திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களை கூடுதலாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்து அறிவித்துள்ளது

Samayam Tamil 8 Nov 2020, 10:36 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தளர்வுகளின்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, திருப்பதியில் இருந்து திருமலைக்கு ரூ.300 தரிசன டிக்கெட் பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, திருப்பதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து அர்ச்சகர்கள் பலியானதால், கோயில் நடை மூடப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன்பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முதல் திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்தது. ஆனால், இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததையடுத்து, கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, திருப்பதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் நாள்தோறும் 3,000 இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த டோக்கன்கள் வழங்கப்படுகிறது. சுமார் 3,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுவதையொட்டி, பக்தர்கள் முதல்நாள் இரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். அடுத்த நாள் காலை சில மணி நேரங்களிலேயே டோக்கன்கள் தீர்ந்து விடுகின்றன. இதனால் பக்தர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திருப்பதி பக்தர்களுக்கு அடுத்த வசதி: அசத்தும் தேவஸ்தானம்!

இதையடுத்து, , திருப்பதி கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று அறிவித்த தேவஸ்தானம், நாள் ஒன்றுக்கு 6,000 இலவச தரிசன டிக்கெட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. பக்தர்கள் இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கமுடியாத சூழ்நிலையால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இத்தகைய முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களை கூடுதலாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்து அறிவித்துள்ளது. அதன்படி, இலவச தரிசனத்துக்காக நாள்தோறும் 10,000 டோக்கன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக விஷ்ணு நிவாசம் விடுதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியுள்ளது.

அடுத்த செய்தி