ஆப்நகரம்

நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாய் கறி விற்பனைக்கும், இறக்குமதிக்கும் கவுகாத்தி உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Samayam Tamil 28 Nov 2020, 5:36 pm

நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த மக்கள் நாய் கறியை மிகவும் விரும்பி சாப்பிடுவர். இம்மாநிலத்தின் பாரம்பரிய பழக்கங்களை பாதுகாப்ப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 371 (ஏ) கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உணவுப் பழக்கங்களுக்கும் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Kohima Dog meat market


எனினும், நாய்களை மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகிய வீடியோக்களை தொடர்ந்து, நாகாலாந்தில் நாய் இறைச்சி இறக்குமதி, வணிக மற்றும் விற்பனைக்கு அம்மாநில அரசு ஜூலை 2ஆம் தேதியன்று தடை விதித்தது.

இதையடுத்து, தடையை விலக்கக்கோரி நாய் கறி இறக்குமதியாளர்களும், வர்த்தகர்களும் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இவ்விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய செப்டம்பர் 14ஆம் தேதியன்று நாகாலாந்து அரசுக்கு நீதிமன்றம் வாய்ப்பளித்தது. ஆனால் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை.

ஊருக்குள்ள வைரம் கிடைச்சிருச்சு: கூட்டமாக படையெடுத்த மக்கள்!

இந்நிலையில், நாய் இறைச்சிக்கு நாகாலாந்து அரசு விதித்த தடைக்கு கவுகாத்தி உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இதன்படி, அடுத்தகட்ட உத்தரவு வரும் வரையில் நாகாலாந்து மாநிலத்தில் நாய் இறைச்சி விற்பனை, வணிகம் மற்றும் இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்படும்.

நாகாலாந்து மாநிலத்தை போலவே மிசோரம் மாநிலத்திலும் கடந்த மார்ச் மாதம் நாய் இறைச்சி இறக்குமதிக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி