ஆப்நகரம்

அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் மீது உரிமை மீறல் தீர்மானம்!

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 20 Sep 2020, 8:45 pm
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. முன்னதாக, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள், மாநிலங்களவையின் மைய மண்டபத்துக்கு வருகை தந்து அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
Samayam Tamil அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்
அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்


அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து துணை சபாநாயாகர் முகத்தில் எரியவும், சபாநாயகரின் மைக்கை உடைக்கும் முயற்சிகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்ற முயற்சித்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு சில எம்.பி.க்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், ராஜ்யசபா துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். விவசாய மசோதாக்கள் மீதான குரல் வாக்கெடுப்பில் குளறுபடி நடந்து இருப்பதாகவும், மசோதாவிற்கு போதுமான ஆதரவு இல்லை என்று கூறியும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறிய விவசாய மசோதாக்கள்; கொந்தளித்த எதிர்க்கட்சிகள்!

இதனிடையே, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநிலங்களாவை தலைவர் வெங்கையா நாயுடு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை தனது வீட்டில் நடத்தினார். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகங்களை கிழித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடு கலந்தாலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் துணை சபாநாயகர் இருக்கைக்கு அருகே அமளியில் ஈடுபட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது "உரிமை மீறல் தீர்மானம்" கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி