ஆப்நகரம்

காற்றிலேயே பரவும் கொரோனா: மத்திய அரசு எச்சரிக்கை!

காற்று மாசுபாட்டால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Samayam Tamil 6 Nov 2020, 11:18 pm

கடந்த சுமார் 11 மாதங்களாக கொரோனா வைரஸுடன் நாம் போராடி வருகிறோம். உலகளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
Samayam Tamil Delhi


இந்தியாவில் இதுவரை 84.1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஏறக்குறைய இயல்புநிலை திரும்பிவிட்டது. மேலும், பண்டிகைக்காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் கொரோனா இறப்பு அதிகமாகலாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அண்மைக்காலமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளது. முக்கியமாக, தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான தரநிலையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில், காற்று மாசுபாட்டால் கோவிட்-19 தொற்று ஆபத்து அதிகரிக்கும் என்று மத்திய சுகாதார துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பாஜக எம்பி ஜகதாம்பிக பால் தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவிடம் மத்திய சுகாதார துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மாசுபாட்டால் சளி போன்ற துகள்கள் நீண்ட நேரத்துக்கு காற்றிலேயே இருக்க முடியும் என்பதால் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் உடல்நலமும், சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக மோசமாக மாசுபடுத்தப்பட்ட 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி