ஆப்நகரம்

கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பனிப்பொழிவு; தத்தளிக்கும் ஹிமாச்சல் பிரதேசம்!

கனமழையால் ஹிமாச்சலின் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Sep 2018, 8:57 am
சிம்லா: கனமழையால் ஹிமாச்சலின் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Himachal


ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய குல்லு துணை ஆணையர் யூனுஸ் கான், பொதுமக்களை மீட்டு, முகாம்களில் சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆறுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து முக்கிய ஆறுகளிலும், அதன் கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பீஸ் ஆற்றில் பாயும் வெள்ள நீரால், மந்தி, ஹமிர்பூர் மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 19 பேரை இந்திய விமானப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

இப்பணியில் ஈடுபட்ட எல்லையோர சாலைகள் அமைப்பு ரோஹ்தாங் பகுதியில் இருந்து 20 பேரை மீட்டுள்ளது. அங்கு 4 அடி உயரத்திற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் குல்லும், குன்னாவூர், லாஹௌல்-ஸ்பிடி மாவட்டங்களிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் கின்னாவூர், குல்லு, காங்ரா மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கின்னாவூர், சம்பா மாவட்டங்களில் சாலைகளில் நிலச்சரிவு காரணமாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

காங்ராவின் லார்ஜி அணை திறக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பண்டோஹ் அணையும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. ஜவாலி நகரில் 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமடைந்துள்ளன.

Himachal Pradesh Heavy rains & flash flood trigger landslides; alert issued.

அடுத்த செய்தி