ஆப்நகரம்

அமைச்சரவையை கூண்டோடு மாற்றும் பினராயி விஜயன்: யாருக்கெல்லாம் இடம்?

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

Samayam Tamil 18 May 2021, 4:08 pm
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்று மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியானது. ஆனால் இன்னும் அங்கு புதிய அரசு பதவியேற்கவில்லை.
Samayam Tamil Pinarayi Vijayan


140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டமன்றத்துக்கு ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி சார்பாக 99 உறுப்பினர்கள் செல்கின்றனர். இதனால் மீண்டும் அந்த அணியே ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 41 தொகுதிகளில் வென்று எதிர்கட்சி வரிசையில் அமர்கிறது. பாஜகவுக்கு கடந்த முறை ஒரே ஒரு எம்எல்ஏ கிடைத்த நிலையில் இந்த முறை அந்த வாய்ப்பையும் கேரள மக்கள் அக்கட்சிக்கு கொடுக்கவில்லை.

திருப்பதி மலையில் புதையல்: அடேயப்பா ஒரு வருஷமா போட்ட திட்டம்!

எல்டிஎஃப் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் அளிக்கப்படுகிறது. முதல்வராக சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயனே மீண்டும் பதவியேற்கிறார். இந்நிலையில் அந்தக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இன்று திருவனந்தபுரத்தில் தேர்தல் முடிவு வெளியான பின்னர் முதல் கூட்டத்தை கூட்டினர்.

கூட்டத்துக்குப் பின்னர் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எந்தெந்த கட்சிக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்கள் என்பதை விவரித்தார். “சிபிஎம் கட்சிக்கு 12 அமைச்சர்களும், சிபிஐக்கு 4, ஜனதாதள் எஸ், கேரள காங்கிரஸ் எம், என்சிபி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் வீதமும் வழங்கப்படும். மீதமுள்ள இரண்டு அமைச்சர் பதவியும் மீதமுள்ள நான்கு கட்சிகளுக்குத் தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் 30 வரை முழு ஊரடங்கா? என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

மொத்தமுள்ள 21 அமைச்சர்களுக்கான துறை குறித்து முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்வார் என்றும் விஜயராகவன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவி சிபிஎம்க்கும், துணை சபாநாயகர் பதவி சிபிஐக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை இந்தக் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது எனவும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக சுகாதாரத் துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்ட சைலஜா டீச்சருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என்றும் கேரளாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் உட்பட 21 அமைச்சர்களும் மே 20ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு நிகழ்வில் 500 பேர் வரை மட்டுமே கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி