ஆப்நகரம்

தமிழகத்தின் ஆயுத தளவாட உற்பத்தி முனையங்களை பயன்படுத்தி கொள்ள ஜெர்மனிக்கு பிரதமர் மோடி அழைப்பு

விண்வெளி, விமானப்போக்குவரத்து, கடற்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 துறைகளின் கீழ் இந்தியா-ஜெர்மனி இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

Samayam Tamil 1 Nov 2019, 7:18 pm
டெல்லி: தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி முனையங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஜெர்மனிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil merkel, modi


இந்தியா - ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 5ஆவது ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் நேற்று மாலை டெல்லி வந்தார். அவரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வரவேற்றார். தொடர்ந்து இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகை சென்ற அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


அதன்பின்னர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில், விண்வெளி, விமானப்போக்குவரத்து, கடற்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 துறைகளின் கீழ் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அத்துடன் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கூட்டாக 5 அறிவிப்புகளும் கையெழுத்தாகின.


இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை 2020ஆம் ஆண்டுக்குள் உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் சிறப்பாக இருக்கும் ஜெர்மனிக்கு இது பயனுள்ளதாக இருக்கும். தீவிரவாதத்திற்கு எதிராக இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்களுக்காக இந்தியாவும், ஜெர்மனியும் தொடர்ந்து செயல்படும். ஸ்மார்ட் சிட்டி, ஆறுகளை தூய்மைப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு சாத்தியங்களுடன் இரு நாடுகளும் செயல்பட முடிவு செய்துள்ளோம் என்றார்.


அத்துடன், தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கான முனையங்களின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜெர்மனிக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து பேசிய ஜெர்மனி அதிபர் மெர்கல், புதிய, அதிநவீன தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, 5ஜி போன்ற சவாலான துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது முக்கியம். இந்தியா எதிர்பார்க்கும் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபடுவதில் நாங்கள் மகிழ்ச்சி என்றார்.

அடுத்த செய்தி