ஆப்நகரம்

கண்ணீர் விட்ட சிவன்; ஆறுதல்படுத்திய பிரதமர் மோடி!!

இந்தியா உங்களுடன் உள்ளது. நமது விண்வெளி திட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை என்று பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் உரையாற்றினார். பிரதமர் இஸ்ரோவில் இருந்து புறப்படும்போது இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட, அவரை பிரதமர் மோடி கட்டியணைத்து ஆறுதல்படுத்தினார்.

Samayam Tamil 7 Sep 2019, 9:41 am
விஞ்ஞானிகளின் மனோ தைரியத்தை பாராட்டுகிறேன். தாய்நாட்டின் கனவுகளை நனவாக்குவதில் ஈடுபட்டுள்ளீர்கள். பின்னடைவு தாக்கத்தை உணர்ந்தேன். இந்தியா உங்களுடன் உள்ளது; பின்னடைவு நிரந்தரமானது அல்ல என்று பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் கூறினார்.
Samayam Tamil Modi with Sivan image


உலக வரலாற்றில்ன் முதன்முறையாக நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவிலிருந்து அனுப்பப்பட்ட சந்திராயன் - 2 விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்த ''விக்ரம் லேண்டர்'' இன்று அதிகாலை 1:40 மணி அளவில் தொடங்கி 1:55 க்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நிமிடங்களில் 400 மீட்டர் தொலைவில் லேண்டர் இருந்த பொழுது சிக்னல் வரவில்லையென இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து இன்று இஸ்ரோவிலிருந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையிலிருந்து, ''தடைகளை சந்தித்தாலும் அவற்றை தாண்டி இருக்கிறோம். நாம் இன்னும் வலிமை அடைய வேண்டும் என்பதற்கான அறிகுறி இது. இப்போதும் நமது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. விண்வெளி சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

நிலவை தொடுவதற்கான நமது பயணம் தொடரும். நிலவைத் தொடும் முயற்சி நிச்சயம் வெற்றி அடையும். பல நாட்கள் தூக்கம் இன்றி நமது விஞ்ஞானிகள் உழைத்து இருக்கிறார்கள். நாட்டுக்காக இந்திய விஞ்ஞானிகள் வாழ்கின்றனர்.

இன்னும் உழைத்து நிச்சயம் வெற்றியை எட்டுவோம். நம்ப முடியாத அளவிற்கான வெற்றியை நீங்கள் தொட்டு இருக்கிறீர்கள். இதற்கு முன்பு யாரும் தொடாத வெற்றியை தொட்டு இருக்கிறீர்கள். புதிய உச்சங்களை இனிதான் அடைய இருக்கிறோம்.

நீங்கள் மீண்டு வந்து மீண்டும் வெற்றியை எட்டுவீர்கள். இது ஒரு பயணம்தான். பயணத்தில் வெற்றி பெற நீங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறீர்கள்'' என்றார்.

பெண் விஞ்ஞானிகள் கண்ணீர்:

பிரதமரின் பேச்சைக் கேட்டு அங்கு அமர்ந்து இருந்த பெண் விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர். சந்திரயான் 2 வெற்றி பெறும் என்ற நிலையில் தோல்வியை சந்தித்தது ஏமாற்றமாக இருந்தாலும், உலக நாடுகள் எடுக்காத முயற்சியை இந்தியா எடுத்து இருந்தது. அந்த முயற்சிதான் தென் துருவத்தில் சந்திரயான் 2 இறங்குவது. தென் துவருத்தை இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் ஆராய்ச்சி செய்தது இல்லை. அங்கு நமது விண்கலம் சென்றதே நமக்கு வெற்றிதான்.

சிவனுக்கு மோடி ஆறுதல்:

பிரதமர் மோடி இஸ்ரோவில் உரையாற்றி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது வழியனுப்ப வந்த இஸ்ரோ தலைவர் சிவன், மோடியைப் பார்த்து கண்ணீர் விட்டார். பிரதமர் மோடி அப்போது சிவனை கட்டியணைத்து, ஆறுதல்படுத்தினார். பிரதமரும் கண்கலங்கி காணப்பட்டார்.

அடுத்த செய்தி