அதிர்ச்சியூட்டும் உச்சம்
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 25,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 25,530 பேரை புதிதாக வைரஸ் பாதித்துள்ளது.
அதிகரிக்கப்படும் பரிசோதனைகள்
தொடர்ந்து 6வது நாளாக 21,000 பேருக்கு மேல் பாதிப்புகளும், 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 7 நாட்களில் 5வது முறையாக பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதற்கு பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஞாயிறு அன்று 1.8 லட்சமும், திங்கள் அன்று 2.41 லட்சமும், செவ்வாய் அன்று 2.62 லட்சமும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் குணமாகும் விகிதம்
கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பால் 493 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஜூலை 4ஆம் தேதி 608 பேர் உயிரிழந்த நிலையில் இது இரண்டாவது உச்சமாகும். இந்தியாவின் மொத்த பலி எண்ணிக்கை 21,122ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பு 7,68,322ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,75,849 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடையும் விகிதம் 62 சதவீதமாக மாறியுள்ளது.
மகாராஷ்டிர நிலவரம்
மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 6,603 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 2,23,724ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 198 பேர் பலியானதன் மூலம் மொத்த எண்ணிக்கை 9,448ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே 12ஆம் தேதிக்கு பிறகு குறைந்தபட்சமாக மும்பையில் 785 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியிருந்தது. ஆனால் அதற்கடுத்த நாளே இரண்டு மடங்காக 1,347ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வைரஸ் தொற்று
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் இரண்டாவது மோசமான மாநிலமாக இருக்கிறது. இம்மாநிலத்தில் புதிதாக 3,756 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 64ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக 2,000க்கும் குறைவாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 1,261 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 2,033 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 1,04,864ஆக அதிகரித்துள்ளது.
மற்ற மாநிலங்களில் பாதிப்பு நிலவரம்
புதிதாக 48 பேர் உயிரிழந்ததன் மூலம் மொத்த எண்ணிக்கை 3,213ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் புதிய உச்சமாக 2,062 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் குஜராத் 783, பீகார் 749, கேரளா 301, கோவாவில் 136 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஒரேநாளில் புதிய உச்சமாக 54 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி 470ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் தொடர்ந்து 8வது நாளாக அதிகபட்ச பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக 16 பேர் பலியானதன் மூலம் மொத்த எண்ணிக்கை 1,995ஆக உயர்ந்துள்ளது. விரைவில் 2,000ஐ தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.