ஆப்நகரம்

இலங்கை எங்களுக்கு ரொம்ப முக்கியம் - ராஜபக்சேவிடம் மோடி பேச்சு!

இலங்கைக்கு இந்தியா சிறப்பு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Sep 2020, 3:45 pm

இந்தியா-இலங்கை இருதரப்பு மாநாடு இன்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும் பங்கேற்றனர்.
Samayam Tamil Modi - Rajapaksa


இந்த சந்திப்பின்போது, அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் முன்னுரிமைக் கொள்கையின்படி, இலங்கை-இந்தியா இடையேயான உறவுக்கு சிறப்பு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது உரையை தமிழில் வணக்கம் சொல்லி தொடங்கினார். பின்னர் அவர் பேசியபோது, “இந்தியா, இலங்கை இடையேயான உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. எனது அரசின் கொள்கைப்படியும், சாகர் கோட்பாட்டின்படியும், இருதரப்பு உறவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

கோவிட்-19 காலகட்டத்தில் மற்றநாடுகளுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளுக்காக இலங்கை பிரதமர் ராஜபக்சே நன்றி தெரிவித்தார். அவர், “எம்டி நியூ டைமண்ட் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டபோது, தீயை அணைக்க இந்திய உதவியது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது” என்று தெரிவித்தார்.

நட்புறவை விரிவாக்க ஆர்வமாக இருக்கிறேன்: மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி பதில்!

இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, கடல்சார் உறவு, பயணக் கட்டுப்பாடுகள், பயிற்சி, இலங்கை இடையேயான பயணம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கொரோனாவுக்கு இடையே இரு தலைவர்களும் தொடர்பில் இருந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு இந்தியா 10 டன் அத்தியாவசிய மருந்துகளை அனுப்பிவைத்தது. இதில், ஹைட்ராக்சிகுளோரோகுயின், பாரசிடமால் உள்ளிட்டவையும் அடங்கும்.

மேலும், இலங்கையில் சோலார் திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர் கடன் வழங்க இந்தியா நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று நடைபெற்ற மாநாடு பிரதமர் மோடியின் முதல் காணொளிக் காட்சி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை பிரதமராக பொறுப்பேற்ற பின் ராஜபக்சே முதல்முறையாக வெளிநாட்டு தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல் மாநாடு இதுவே.

அடுத்த செய்தி