ஆப்நகரம்

தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய வீரர்கள்; தற்போதைய நிலை என்ன- தணிந்ததா எல்லை பதற்றம்?

இந்திய - சீன எல்லையில் நடந்த பயங்கர மோதலில் படுகாயமடைந்த இந்திய ராணுவத்தினரின் நிலை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 19 Jun 2020, 9:36 am
கடந்த மே 5ஆம் தேதி கிழக்கு லடாக்கின் பாங்கோங் சோ ஏரிப் பகுதிக்கு அருகே இந்திய - சீன வீரர்கள் திடீரென மோதிக் கொண்டனர். இதில் பலரும் காயமடைந்தனர். இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றமான சூழல் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் பல வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Samayam Tamil இந்திய ராணுவ வீரர்கள்


நேற்றைய தினம் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள பேட்ரோல் பாயிண்ட் 14ல் இருநாட்டு மேஜர் ஜெனரல்கள் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது மே மாதத்தில் இருந்து 7வதும், கடந்த திங்கட்கிழமையில் இருந்து 3வதுமான கூட்டமாகும்.

India-China Clash: சீன ராணுவத்தினர் பயன்படுத்தியது இந்த ஆயுதம்தானா?

இதில் இருதரப்பினரும் நீண்ட நேரம் விவாதித்தனர். அப்போது எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீனா தனது அத்துமீறல்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. வரும் நாட்களில் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த புதன் அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார்.

இதற்கிடையில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற மோதலில் எந்தவொரு இந்திய வீரரும் காணாமல் போகவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்திய - சீன ராணுவம் மோதிக் கொண்டதில் 76 இந்திய வீரர்கள் காயமடைந்தனர்.

இதில் படுகாயமடைந்துள்ள 18 பேர் லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 58 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைவரது உடல்நிலையும் தேறி வரும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் ராணுவ வீரர்களை காணவில்லையா? மத்திய அரசு விளக்கம்!

எல்லையில் வீரமரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களின் உடல்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து ராணுவ மரியாதையுடன் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

அடுத்த செய்தி