ஆப்நகரம்

எகிறும் டெல்லி, குணமாக்கும் கேரளா- இப்படியொரு உச்சம் தொட்ட இந்தியா!

நேற்று ஒரேநாளில் தலைநகர் டெல்லியில் அதிகளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Samayam Tamil 14 Apr 2020, 8:12 am
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு 10,450ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் நேற்று ஒரேநாளில் 356 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தப்லிகி ஜமாஅத் நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது டெல்லியில் பாதிக்கப்பட்ட நபர்களில் 79 சதவீதம் பேர் தப்லிகி ஜமாஅத் நிகழ்வால் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 352 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களும் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 37 சதவீதத்தைக் கொண்டுள்ளனர்.
Samayam Tamil இந்தியாவில் கோவிட்-19


நேற்றைய தினம் நாடு முழுவதும் 1276 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவே ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை(763) உடன் ஒப்பிடுகையில் நேற்று 67 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் இத்தனை நாட்கள் இருக்கு- ஊரடங்கை தாமாக நீட்டித்த மாநிலங்கள் இவை தான்!

வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் 1193 பேர் ஆகும். நேற்று ஒரேநாளில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா(160) மற்றும் டெல்லியில்(28) 188 பேர் பலியாகி இருக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 112 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 589ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தியும் கிடைத்திருக்கிறது.

கடந்த 14 நாட்களில் நாட்டின் 25 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கோவிட்-19 பாதிப்பு ஏற்படவில்லை. மொத்தமுள்ள 732 மாவட்டங்களில் 380ல் மட்டுமே வைரஸ் பாதிப்பு பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 11 பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெல்லூரைச் சேர்ந்த 56 வயதான மருத்துவர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இம்மாநிலத்தில் புதிதாக 3 மருத்துவர்கள் உட்பட 98 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கலபுர்கி மாவட்டத்தில் 55 வயதான நபர் வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 15 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 247ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கோவிட்-19 பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு குணமாகி வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி