ஆப்நகரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: ப.சிதம்பரம் 4ஆவது குற்றவாளியாக சேர்ப்பு

ஐ.என்.எக்ஸ் நிறுவனர் பீட்டர் முகர்ஜி, ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 18 Oct 2019, 2:10 pm
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil chidambaram


அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தன்னுடைய தந்தை ப.சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு சாப்பாடு... தனி அறை.... ப.சி.யின் கோரிக்கைகளுக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!!

இதனிடையே, சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அபிஜித் பானர்ஜியின் அறிக்கை மத்திய அரசுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவில்லையா: ப.சிதம்பரம் கேள்வி

சிதம்பரத்தின் ஜாமின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அவரது காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரத்தின் சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவரது காவலை வருகிற 24ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியிருந்தது. நீதிமன்றம் அளித்த அனுமதியின் பேரில், டெல்லி திகார் சிறையில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சிறையில் வைத்தே அவரை கைது செய்தனர். இதையடுத்து, அமலாக்கத்துறையினரின் பிடியில் சிதம்பரம் தற்போது உள்ளார்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடக்கம்: பிரதமர் மோடி

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் நிறுவனர் பீட்டர் முகர்ஜி, ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் வருகிற 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குற்றப்பத்திரிகையில், பீட்டர் முகர்ஜி முதல் குற்றவாளியாகவும், கார்த்தி இரண்டாவது குற்றவாளியாகவும், ப.சிதம்பரம் நான்காவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி