ஆப்நகரம்

பிரக்யாவின் வெற்றி வழக்கு: தள்ளுபடி செய்யச் சொன்ன பிரக்யாவின் மனு தள்ளுபடி

காணொலிக் காட்சிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது எனவே இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும்,இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பிரக்யா சிங், அதே ஜபல்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Samayam Tamil 14 Dec 2019, 7:45 am
மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு,கைதாகி, ஜாமினில் வெளிவந்து எம்.பி. ஆகியிருக்கும் பா.ஜ.க. எம்.பி பிரக்யா சிங் தாகூர் தொடர்ந்த வழக்கை ஜபல்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil sadhvi pragaya


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார் பிரக்யா சிங் தாகூர். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் எப்போதுமே ஏக பொருத்தம். கோட்சே என்னும் நாட்டுப்பற்று மிக்க தலைவர் என்பது பிரக்யாவின் விடாப்பிடி வாதம்.

இவர், மக்களவைத் தேர்தலின் போது, தன் பிரசாரக்களம் முழுக்க மத உணர்வைத்தூண்டும் விதமாக பிரசாரம் செய்துள்ளார் என்றும், இந்த வழியில் பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்றும் அறிவிக்கக் கோரி ராகேஷ் தீக்‌ஷித் என்னும் பத்திரிகையாளர் பிரக்யாவின் வெற்றிக்கு எதிராக ஜபல்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குக்கு ஆதாரமாக மத வன்முறையத் தூண்டும் விதமாக பிரக்யா பேசிய பேச்சின் காணொலிக் (வீடியோ) காட்சிகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த காணொலிக் காட்சிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது எனவே இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும்,இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பிரக்யா சிங், அதே ஜபல்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நேற்று இந்த (பிரக்யா தொடர்ந்த மனு) மனுவை ஜபல்பூர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரக்யா மீதான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று ராகேஷ் திக்‌ஷித்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி