ஆப்நகரம்

ஜம்மு தனி மாநிலம் ஆகிறது என்பது வதந்தியா?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்றாக பிளவுபடுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதால், யாரும் நம்ப வேண்டும். மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Samayam Tamil 4 Aug 2019, 9:18 am
நாட்டின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீர் மாநிலம் எப்போதும் பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்பட்டு வருகிறது. இங்கு இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த போது, இந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இவற்றை மத்திய அரசு ரத்து செய்யப் போவதாக தகவல்கள் பரவின.
Samayam Tamil Kashmir Tension


இதனால் பொதுமக்களிடையே பதற்றம் ஏற்படத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 10,000 வீரர்கள் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டனர். ஏற்கனவே அங்கு 60,000 பாதுகாப்பு படை வீரர்களும், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பிற்கு 20,000 வீரர்களும் பணியில் இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 90,000 வீரர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் அனுப்பியுள்ளது. மேலும் அமர்நாத் புனித யாத்திரை செல்லும் வழியில் “ஸ்னைப்பர் எம்-24” ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் உடனடியாக அமர்நாத் யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்புமாறு காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

Also Read: 35A in Kashmir: ஜம்மு காஷ்மீர் பதட்டத்திற்கு இதுதான் காரணமா?

இதையொட்டி சிறப்பு விமானங்கள், பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் உள்ளூர் மக்கள் ஏடிஎம்கள், பெட்ரோல் நிலையங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து கல்லூரிகளின் விடுதிகளிலும் தங்கியுள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது இந்த மாநிலத்தை மூன்றாக பிரிக்க வாய்ப்பு உள்ளதாம். ஜம்மு தனி மாநிலம் ஆகக் கூடும் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவிக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இதனை யாரும் நம்ப வேண்டும்.

Also Read: ஸ்ரீநகரில் என்ஐடி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் வெளியேற்றம்!

அவ்வாறு செய்தால் காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு சட்டப் பிரிவுகள் தானாக ரத்தாகி விடும். அம்மாநிலத்தின் அனைத்துவிதமான சட்ட நடவடிக்கைகளிலும் மத்திய அரசு நேரடியாக தலையிட முடியும். இதையொட்டியே மத்திய அரசு காய் நகர்த்தி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நடவடிக்கையால் அம்மாநில மக்கள் பெரும் அதிருப்தி அடையக் கூடும். மாநிலம் முழுவதும் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது.

மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க நேரிடும். நிலைமை கட்டுக்குள் வராமல், பெரும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புண்டு. இவற்றைத் தவிர்க்கவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. தற்போது மாநிலம் முழுவதையும் மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்களை வெளியேற்றும் வேலையில் தற்போது ஈடுபட்டு வருகிறது.

இதனால் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் அறிவிப்பு வெளியாகும் போது, ஜம்மு காஷ்மீரில் எந்தவித பிரச்சனையும் இன்றி கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று மத்திய அரசு கருதுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், பயங்கரவாதிகள் ஊடுருவல், ஆயுதங்கள் பறிமுதல், உளவுத்துறை எச்சரிக்கை என்றெல்லாம் அரசு கூறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Also Read: அமைதியை கடைபிடிக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம்- காஷ்மீர் ஆளுநர்!

இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் மெகபூபா, மக்கள் இயக்கத் தலைவர் ஷா பாசல், மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சாஜத் லோனே உள்ளிட்டோர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து பேசியுள்ளனர். இதன்பிறகு ஆளுநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக எந்தவித தகவலும் இதுவரை வரவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் குப்வாரா மாவட்டம் கேரன் செக்டாரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே 36 மணி நேரமாக சண்டை நீடித்தது. இதில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி