ஆப்நகரம்

ஸ்டாலின், அழகிரியை சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருக்கு கொரோனா!

காங்கிரஸ் எம்.எல்.ஏ தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Sep 2020, 12:48 pm
கர்நாடக மாநிலம் காந்தி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தினேஷ் குண்டுராவ். இவர் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், எனக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. எனவே 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள் பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Samayam Tamil Dinesh Gundu Rao


இதனால் 8 நாட்கள் கூட்டத்தொடர் 6 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த சூழலில் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் கோவிந்த் எம்.கர்ஜோலுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இதுவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக முதல்முறை சென்னை வந்த இவர், கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

இப்படியொரு துயரத்துடன் மறைந்த ஜஸ்வந்த் சிங்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!

சத்தியமூர்த்தி பவனில் தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினார். அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதில் மத்திய அரசின் நடவடிக்கைகள், கர்நாடகா மற்றும் தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தினேஷ் குண்டுராவ் கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி