ஆப்நகரம்

செல்ஃபி எடுங்க... சந்தோஷமான வீட்டுல இருங்க: கர்நாடக அரசின் அசத்தல் உத்தரவு!!

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு கர்நாடக மாநில அரசு வித்தியாசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 31 Mar 2020, 9:55 am
உலகையே இன்று உலுக்கிவரும் கொரோனா வைரஸ் நம் நாட்டையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது.
Samayam Tamil karanataka


உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இந்தியாவில் கொரோனாவால் முதல் மரணம் நிகழ்ந்த மாநிலமான கர்நாடகத்திலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தொற்றின் தீவிரத்தை பொறுத்து வீட்டிலோ, மருத்துவமனையிலோ தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா இறப்பு: இறுதிச்சடங்குக்கு மும்பை மாநகராட்சி கடும் நிபந்தனை!!

இந்த நிலையில், பெங்களூரில் கொரோனா தொற்றின் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பேர், வீட்டிலிருந்து இன்று தப்பியோடினர். அவர்களை சில மணிநேரத்திலேயே போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, கொரோனா சிகிச்சைக்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் வித்தியாசமான உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், "வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர், தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை தங்களது ஸ்மார்ட்போனில் செல்ஃபி எடுத்து அரசுக்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த உத்தரவை செயல்படுத்த தவறுவோர், அவர்களது வீடுகளில் இருந்து அரசின் தனிமைப்படுத்துதல் மையங்களுக்கு மாற்றப்படுவார்கள்" என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தங்களது வீட்டில் இருந்து வெளியே செல்லாததை உறுதிசெய்யும் நோக்கத்துடன் கர்நாடக மாநில அமைச்சர் இப்படியொரு வித்தியாசமான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அடுத்த செய்தி