ஆப்நகரம்

கர்நாடகாவில் இன்று நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு?

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 22 Jul 2019, 10:00 am
கர்நாடகா சட்டமன்றம் 2 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடும் நிலையில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil Kumaraswamy-AV


கர்நாடகா மாநிலத்தில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் வழங்கியதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் கடந்த 18ம் தேதி முதல்வர் குமாரசாமி மீது தொடங்கிய விவாதம் 19ம் தேதி இரவு வரை நீடித்தது. வாக்கெடுப்பு நடத்தி முடிக்கக் கோரி ஆளுநர் இரு முறை கெடு விதித்த நிலையில், இரண்டு முறையும் ஆளுநரின் கெடுவை நிராகரித்து சட்டமன்றம் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் சட்டமன்றம் இன்று கூடும் நிலையில், விவாதத்திற்குப் பின் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மதசார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் குண்டு ராவ் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆட்சியை தக்கவைப்பதற்காக முதல்வரை மாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்தத் தலைவர் சித்தராமையா, பரமேஸ்வரா உள்ளிட்டோரை முதல்வராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனை அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இக்கருத்தை அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர். தங்களது சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரை மாற்றுவது என்பது காலம் கடந்த செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி