ஆப்நகரம்

உறுதியான சசிகலா விடுதலை; ஆனாலும் பெங்களூருவில் இருந்து வர மாட்டார்!

சசிகலா விடுதலை தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது

Samayam Tamil 25 Jan 2021, 8:40 pm
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருகிற 27ஆம் தேதியன்று விடுதலையாவார் என்றும், அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சசிகலாவின் அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை உறுதியாகியுள்ளது.
Samayam Tamil சசிகலா
சசிகலா


சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விடுதலை தள்ளிப் போனது. ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதி என்றும், அதற்கான அலுவல்பூர்வ கடிதம் கிடைத்துவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சசிகலா வருகிற 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும், அவரது விடுதலை தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது. நாளை குடியரசு தினம் பொது விடுமுறை என்பதால் இன்றே அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்து விட்டதாக தெரிகிறது.

சசிகலா விடுதலை: வெளியான புதுத் தகவல்!

முன்னதாக, சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை நிறுத்தி வைத்தனர். இதனிடையே, சசிகலாவின் உடல் நலம் தேறி வருவதாகவும், அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, மருத்துவமனையில் இருந்தே அவர் விடுதலை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் சசிகலா விடுதலையாவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. இருந்தபோதிலும் அவர் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு தற்போதைக்கு வர மாட்டார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்” என்று பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், “கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி