ஆப்நகரம்

கத்துவா சிறுமி பாலியல் வன்புணர்வு: வழக்குக்கு வலு சேர்க்கும் தடயங்கள்!

காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா இனத்தைச் சேர்ந்த 8 வயது முஸ்லீம் சிறுமி, இந்துத்துவா வெறியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடயவியல் சோதனை அறிக்கை தற்போது வெளி வந்துள்ளது.

Samayam Tamil 21 Apr 2018, 1:21 pm
காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா இனத்தைச் சேர்ந்த 8 வயது முஸ்லீம் சிறுமி, இந்துத்துவா வெறியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடயவியல் சோதனை அறிக்கை தற்போது வெளி வந்துள்ளது.
Samayam Tamil kathua
கத்துவா சிறுமி பாலியல் வன்புணர்வு: வழக்குக்கு வலு சேர்க்கும் தடயங்கள்!


ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஜனவரி 10ஆம் தேதி குதிரையை தேடிச்சென்ற போது காணாமல் போனார். சிறுமியின் தந்தை யூசஃப், ஹீரா நகர் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். சிறுமி யாருடனாவது சென்றிருப்பார் என காவல்துறை கூறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு பின்னர், ரஸன்னா வனப்பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதனையடுத்து இது தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி குற்றப்பிரிவு உயர் எஸ்.பி. ரமேஷ் குமார் ஜல்லா தலைமையிலான குழு தங்கள் விசாரணையை தொடங்கினர்.

அதில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கோயிலின் நிர்வாகியும், முக்கிய குற்றவாளியுமான ராம்ஜி, அவரது மகன் மற்றும் அவனது நண்பன் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கை முன்னர் விசாரித்து வந்த காவல்துறை அதிகாரியும், வழக்கின் முக்கிய குற்றவாளியான தீபக் ஹாஜுரியா சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நாட்டையே உலுக்கிய சிறுமி படுகொலை வழக்கில் தடயவியல் சோதனை அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வந்துள்ளது. சிறுமியின்உடைகள், இரத்தம் படிந்த மண் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் உள்ளிட்ட 14 பொருட்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக தடயவியல் ஆய்வக அதிகாரிகள் கூறுகையில், தடயவியல் சோதனையில் குற்றவாளிகளுக்கு எதிராக அறிக்கை வந்துள்ளது. காவல்துறையினர் அளித்த ரத்த மாதிரிகளுடன் அவை ஒத்துப்போகிறது. இந்த அறிக்கை ஏப்ரல் 3ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு புலனாய்வு துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கோவிலில் இருந்து இரண்டு தலைமுடிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. தற்போது அதுவும் யாருடையது என கண்டறியப்பட்டுள்ளது. தலைமுடியின் வேர்களை ஆராய்ந்ததில் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சிறுமியுடையது மற்றொன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடையது என தெரியவந்துள்ளது. இது இந்த வழக்கில் மிகவும் முக்கியமான ஆதாரமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

சிறுமியின் உடைகளில் இருந்த தடயங்களை உள்ளூர் காவல்துறையினர் மறைக்க முயற்சித்துள்ளனர். சிறுமியின் ஆடைகளில் இருந்த சேற்றை தண்ணீரைக் கொண்டு கழுவியுள்ளனர். மேலும் ஆடைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்துள்ளனர். இதனால் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த உடைகளில் இருந்த ரத்தக்கறை அழியவில்லை அதனையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லாத நிலையில், தடயவியல் சோதனை அறிக்கைகள் இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் என்று தெரியவருகிறது.

அடுத்த செய்தி