ஆப்நகரம்

கேரள முதல்வருக்கு நல்லாவே தெரியும்; தங்கக் கடத்தல் ஸ்வப்னா பகீர் வாக்குமூலம்!

தங்கக் கடத்தல் விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் ஸ்வப்னா சுரேஷ் அதிர்ச்சிகர வாக்குமூலம் அளித்துள்ளார்.

Samayam Tamil 8 Oct 2020, 7:28 pm
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று 303 பக்கங்கள் கொண்ட முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த எம்.சிவசங்கரை பலமுறை சந்தித்துள்ளேன். அதிகாரப்பூர்வமாக 8 முறையும், தனிப்பட்ட முறையில் பலமுறையும் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 5 முதல் 6 முறை முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் சந்திப்பு நடந்துள்ளது.
Samayam Tamil Swapna Suresh


மாநில அரசு ஏஜென்சியான ஸ்பேஸ் பார்க் மூலம் என்னை வேலைக்கு அமர்த்தியது பற்றி பினராயி விஜயனுக்கு நன்றாகவே தெரியும். அவரின் ஒப்புதலின் பேரில் தான் பணி நியமனம் நடந்துள்ளது. தனது பணி மற்றும் பொறுப்புகள் தொடர்பாக KSITIL மேலாண் இயக்குநர் ஜெய்சங்கர் மற்றும் சிறப்பு அதிகாரி சந்தோஷ் ஆகியோரை சந்தித்து தெரிந்து கொள்ள சிவசங்கர் அறிவுறுத்தினார் என்று ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் யுனிடாக் நிறுவனத்தைச் சேர்க்க ஸ்வப்னா மூலமாக சிவசங்கர் ஏற்படுத்தி தந்த வாய்ப்புகள், இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்ட விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

முக்கிய குற்றவாளிகள் கைது; அனல்பறக்கும் கேரள தங்கக் கடத்தல் வழக்கு!

அதாவது யுனிடாக் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் பெற்று தந்த விவகாரத்தில் ஸ்வப்னாவிற்கு ரூ.1.08 கோடி கமிஷன் கிடைத்துள்ளது. இதில் தூதரக ஜெனரல் காலித் மற்றும் ஸ்வப்னாவிற்கு 3 மில்லியன் திராம்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

எஞ்சிய 6 சதவீத பணம் சந்தீப், சரீத் மற்றும் ஸ்வப்னாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஸ்வப்னாவின் ஜாமீன் மனுவிற்கு சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் நேற்றைய தினம் அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இருதரப்பு வாதங்களையும் நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது.

அடுத்த செய்தி