ஆப்நகரம்

அதிகரிக்கும் கொரோனா: கேரளாவில் மீண்டும் ஊரடங்கு

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கேரள மாநிலத்தில் வருகிற 31ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 2 Oct 2020, 10:01 pm
கொரோனா தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த போது கேரளாவில் அதிகளவு தாக்கம் இருந்தது. ஆனால், அம்மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் அம்மாநிலத்தில் தொற்றின் அளவு குறைந்ததுடன், கொரோனாவை கையாள்வதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கடந்த சில மாதங்களாக எந்தவொரு புதிய கொரோனா தொற்றும் இல்லாமல் கட்டுக்குள் வைத்திருந்த கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று வீரியம் கொண்டு எழுந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 9,258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அங்கு 77,482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இதுவரை 1,35,144 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கேரளா தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது நாளை முதல் அமலுக்கு வருகிறது. வருகிற 31ஆம் தேதி வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹத்ராஸ் பெண்ணுக்காக ஒவ்வொரு பெண்ணும் நீதி கேட்க வேண்டும்: பிரியங்கா பாய்ச்சல்!

ஆனால், இந்த 144 தடையுத்தரவானது தொழில் செய்பவர்கள், அரசு ஊழியர்கள், சந்தைகளுக்கு பொருந்தாது எனவும், கடந்த அன்லாக் நடைமுறையின் போது ஹாட்ஸ்பாட்களுக்கு வெளியே 100 பேர் கூடிக் கொள்ளலாம் எனவும், நிபந்தனைகளின் அடிப்படையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தியேட்டர்களை திறந்து கொள்ளலாம் என்று வழங்கப்பட்டஅனுமதியையும் இது கட்டுப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா பரிசோதனைகளை அம்மாநில அரசு அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 59,157 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை விட இறப்பு விகிதம் கேரளாவில் குறைவாகவே உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 771 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி