ஆப்நகரம்

கேரளாவில் இரண்டு காவலர்களுக்கு தூக்கு தண்டனை- சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

கேரளாவில் விசாரணை கைதியை அடித்துக்கொன்ற வழக்கில், பணியில் உள்ள காவல்துறையினர் இருவருக்கு தூக்கு விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 26 Jul 2018, 9:17 am
கேரளாவில் விசாரணை கைதியை அடித்துக்கொன்ற வழக்கில், பணியில் உள்ள காவல்துறையினர் இருவருக்கு தூக்கு விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil kerala-custodial-death-cover-pic
பணியில் உள்ள காவலர் இருவருக்கு தூக்கு தண்டனை: கேரளாவில் அதிரடி


கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி, ரூ. 2000 திருடப்பட்ட வழக்கில் உதயகுமார் என்ற இளைஞர் திருவனந்தபுரம் போர்ட் காவல் நிலையத்திற்கு போலீஸரால் அழைத்து செல்லப்பட்டார்.

அன்று இரவு அவரை கடுமையாக அடித்து போலீஸார் விசாரணை நடத்தியதாகவும், அதனால் படுகாயமடைந்த அவர் காவல் நிலையத்திலேயே மரணமடைந்ததாக சொல்லப்பட்டது.

இது தொடர்பாக இளைஞர் உதயகுமாரின் தாய் பிரபாவதி, உடனடியாக வழக்கு தொடர்ந்தார். சிபிஐ-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு, திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மரணமடைந்த இளைஞர் உதயகுமாரின் உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், அவர் துன்புறுத்தபப்ட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து கேரளா மாநிலம் முழுவதும் இந்த வழக்கு பரபரப்பை கிளப்பியது.

அதன்படி, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. உதயகுமார் காவல் நிலையத்தில் மரணமடைந்தது தொடர்பாக 5 காவலர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அதில் கான்ஸ்டபிள் கே. ஜித்தகுமார், எஸ்.வி ஸ்ரீகுமார் ஆகியோருக்கு இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் முன்னாள் உதவி ஆணையாளர் டி.கே. ஹரிதாஸ், காவல்துறை மேலாளர்
இ.கே. சாபு, உதவி காவல்துறை மேலாளர் அஜித் குமார் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பணியில் உள்ள காவலர்கள் இருவருக்கு தூக்கு தண்டனை விதித்து வெளியிடப்பட்டுள்ள இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதே சமயத்தில், மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு சட்டப்போராட்டம் நடத்திய இளைஞர் உதயகுமாரின் தாய் பிரபாவதி (68), இந்த வழக்கில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி மற்றும் நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி