ஆப்நகரம்

கேரளாவில் நடைபெற்ற வன்முறையில் ஒருவர் பலி; 750 பேர் கைது..!!

கேரளாவின் முழு அடைப்பு போராட்டம் போது ஏற்பட்ட வன்முறை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்த செய்தி ஊடகங்களில் முதன்மை பெற்று வருகிறது.

Samayam Tamil 5 Jan 2019, 12:19 am
கேரளாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil கேரள வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியீடு


சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. அப்போது, பிந்து, கனகதுர்கா ஆகிய 50 வயதிற்குட்பட்ட இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பினர்.

கேரளா முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள அரசைக் கண்டித்து இந்து அமைப்பினர், பாஜக-வினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்கலைக்கழக, பள்ளி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

போராட்டத்தின் போது, சாலைகளில் டயர்களை எரித்தும், கிரானைட் கற்களை கொண்டு தடை ஏற்படுத்தியும் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர். சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் பல இடங்களில் கடைகளின் ஷட்டர்களை இறக்கி வலுக்கட்டாயமாக மூடினர். சில கடைகள் அடித்தும் நொறுக்கப்பட்டன. வலுக்கட்டையாமாக கடைகளை மூடக் கோரி தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கடைக்காரர்கள் ஒன்று சேர்ந்து விரட்டியடித்தனர்.

மலப்புரம் தவலூரில், உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதேபோல், கொட்டாரக்கரையில், பாஜக - மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. நெடுமங்காடு காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக, மாநிலம் முழுவதும், 750-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 21 காவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதேபோல், வன்முறை காரணமாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

அடுத்த செய்தி