ஆப்நகரம்

ஹரியானாவில் மாறுகிறது கூட்டணி கணக்கு... செல்லாக் காசாகிறாரா கிங்மேக்கர்!!

ஹரியானா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுக்க முடிவான பின்னர் அரசு அமைவதிலும் கணக்கு மாறுகிறது. மீண்டும் முதல்வராக நாளை கட்டார் பொறுப்பேற்கிறார்.

Dhanalakshmi.G | Samayam Tamil 25 Oct 2019, 4:54 pm
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு 40 இடங்களில், காங்கிரஸ் கட்சிக்கு 31 இடங்களில், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில், இந்திய நேஷனல் லோக் தளம் 1 இடத்திலும், சுயேட்சைகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
Samayam Tamil khattar


மொத்தம் 90 இடங்களைப் பெற்று இருக்கும் ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை. எந்தக் கட்சிக்கும் இந்த வெற்றி கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலை இருந்தது. இந்தக் கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கிங் மேக்கராக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி முடிவுகள் வெளியான பின்னர் சவுதாலாவின் ஆதரவு யாருக்கும் தேவையில்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் 8 சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் ஆதரவை தற்போது பாஜக கோரியுள்ளது. இவர்களில் நயன் பால் ராவத், கோபால் கந்தா, ரஞ்சித் சிங் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அனைத்து சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கோபால் கந்தா தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க இன்னும் பாஜகவுக்கு 6 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்னும் மூன்று எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கிடைத்தால் போதும். எப்படியும் பாஜக இந்த ஆதரவை திரட்டி விடும்.

மீண்டும் தனது தலைமையில் காங்கிரசை தூக்கிப் பிடித்தாரா சோனியா?

இதை முன் வைத்தே, நாளை மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் ஹரியானாவில் அமைகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து ஜனநாயக ஜனதா கட்சி முடிவு செய்யவில்லை. பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவும் ஜனநாயக ஜனதா கட்சிக்கு தயக்கம் இருக்கிறது. ஏனென்றால், கடந்த ஆட்சியில் இந்திய நேஷனல் லோக் தளம் கட்சி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. அந்தக் கட்சியின் 14 எம்.எல்.ஏ.,க்களில் 10 பேரை பாஜக தனது கட்சியிக்குள் இழுத்தது. இதேபோல் சிரோமணி அகாலிதளம் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களையும் பாஜக இழுத்துக் கொண்டது.

பட்னாவிஸ் பெற்ற வெற்றியும் சிவ சேனையின் சிக்கலும்

இதையெல்லாம் துஷ்யந்த் அறியாதவர் இல்லை. இதை முன்னிறுத்திதான் காங்கிரஸ் கட்சித் தலைவர் குமாரி செல்ஜாவும் குறிப்பிட்டுள்ளார். ''பாஜகவுக்கு எதிரான வாக்குகள்தான் ஜனநாயக ஜனதா கட்சிக்கு சென்றுள்ளது. எனவே பாஜகவுக்கு ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால், அது மக்களுக்கு எதிரான முடிவானதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற இடைத்தேர்தல் கொடுத்த பாடம்... பாஜக செவி சாய்க்குமா?

காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ''ஹரியானாவில் அதிகாரத்தை, பண பலத்தை வைத்து ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது. இது கட்சி தாவலுக்கு வலி வகுக்கும்'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் சர்தார் நிஷாந்த் சிங் கூறுகையில், ''இரண்டு கட்சிகளிலும் இருந்து எங்களை தொடர்பு கொண்டுள்ளனர்'' என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு கொடுத்தாலும் ஆட்சி அமைக்கப் போதுமான பலம் இல்லை. காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும், ஜெஜெபி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவை இரண்டும் இணைந்தாலும், மேலும் ஆறு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவைப்படும்.

இதற்கிடையே கட்சி முடிவு குறித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் துஷ்யந்த பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துஷ்யந்த் கூறுகையில், ''ஹரியானா மக்களுக்கு வேலை வாய்ப்பு 75% வழங்க வேண்டும். சவுத்ரி தேவி லாலின் கனவான முதியோர் பென்ஷன் அமலாக்கம் ஆகியவற்றை செயல்படுத்த முன் வரும் கட்சிக்கு எங்களது ஆதரவு உண்டு. இதுவரை நாங்கள் யாரையும் அணுகவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக சுயேட்சைகளை நம்பி நாளை பாஜக ஆட்சி அமைக்கிறது. கட்டார் முதல்வராகிறார்.
எழுத்தாளர் பற்றி
Dhanalakshmi.G

அடுத்த செய்தி