ஆப்நகரம்

கூட்டத்தொடர் அதுக்குள்ள முடிஞ்சிருச்சே; முன்கூட்டியே நிறைவு செய்ய என்ன காரணம்?

மக்களவை கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Samayam Tamil 24 Sep 2020, 6:21 am
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. கொரோனா ஊரடங்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காலையில் மாநிலங்களவை கூட்டமும், மாலையில் மக்களவை கூட்டமும் நடத்தப்பட்டன. அனைத்து எம்.பிக்களும் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். சனி, ஞாயிறு என விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் கூட்டத்தொடர் நடைபெற்றது.
Samayam Tamil Monsoon Session Ends


இந்த கூட்டத்தொடரில் வேளாண் மசோதாக்கள், வங்கி ஒழுங்கு முறை திருத்த மசோதா, எம்.பிகளுக்கான சம்பள குறைப்பு மசோதா, தொழிலாளர் சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வேளாண் மசோதாக்களுக்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி, மசோதா நகல் கிழிப்பு, 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட், நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா என அனல்பறந்தது. இந்நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அறிவித்தார். அப்போது அவையில் பிரதமர் மோடியும் வருகை புரிந்திருந்தார்.

என்ன காரணம்?

வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 8 நாட்கள் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்ற பல எம்.பிக்கள், அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு; 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு!

மாநிலங்களவை ஒத்திவைப்பு

முன்னதாக மாநிலங்களவை ஒத்திவைக்கும் போது பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, மாநிலங்களவையின் 252வது கூட்டத்தொடர் இன்று முடிவுக்கு வந்துள்ளது. நடப்பாண்டின் தொடக்கம் முதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அவையில் முதல்முறை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. 18 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 10வது அமர்விலேயே கூட்டத்தொடரை நிறைவு செய்கிறோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி