ஆப்நகரம்

சோஷியல் மீடியாவில் ஏமாற்று வேலைகள்: அரசு எச்சரிக்கை!

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் மோசடி வேலைகளை நம்பி ஏமாற வேண்டாம் என மகாராஷ்டிர சைபர் துறை அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Jul 2020, 8:30 pm
அமெரிக்காவை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகள் நேற்று ஹேக் செய்யப்பட்டு அதில் பிட்காயின் கிரிப்டோ நாணயம் பற்றிய தகவல்கள் பதிவிடப்பட்டன. இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வருவதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை ட்விட்டர் பலப்படுத்தியுள்ளது.
Samayam Tamil ட்விட்டர் பாதுகாப்பு


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, பணக்காரர்களான பில் கேட்ஸ், எலான் மஸ்க், வாரன் பஃப்பட் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் பற்றிய செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், மக்கள் கொடுக்கும் பணம் இரு மடங்கு திருப்பித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மற்ற சமூக வலைதள நிறுவனங்கள் கவனமாக இருந்து, பாதுகாப்பு மீறல்கள் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கும்படி மகாராஷ்டிர சைபர் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர சைபர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரமுகர்கள், விஐபிகளின் சமூக வலைதள கணக்குகளை பாதுகாக்கும் வகையில் கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்திய விஐபிகளின் கணக்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ட்விட்டர் நிறுவனம் தகவல் தெரிவிக்க வேண்டுமென சைபர் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

*சமூக வலைதளங்களில் வெளியாகும் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பக்கூடாது. தகவல்களை சரிபார்க்க நேரம் செலவிட வேண்டும்.

*போலி செய்திகள், வதந்திகளை போல தோன்றும் பதிவுகளை பரப்ப வேண்டாம். வெறுப்புணர்ச்சியையும், வன்முறை பேச்சுகளையும் பரப்புவது கூடாது.

*சமூக வலைதளங்களில் பரவலாக பரப்பப்படும் கிரிப்டோ நாணய ஏமாற்று வேலைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

*வலுவான பாஸ்வோர்டுகள், பாஸ்வோர்டுகளை அடிக்கடி மாற்றுவது, இரண்டு அடுக்கு சரிபார்ப்பு போன்ற சைபர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

*சந்தேகத்திற்குரிய விஷயங்கள் குறித்து உங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.

அடுத்த செய்தி