ஆப்நகரம்

புலம்பெயர் தொழிலாளர்களே போகாதீங்க; இலவச உணவு, இருப்பிடம் ரெடி- முன்வந்த மாநில அரசு!

அரசு கட்டடங்களை தொழிலாளர்களுக்கு உறைவிடமாக மாற்றி, போதிய உணவு வழங்க மகாராஷ்டிர அரசு முன்வந்துள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 1:59 pm
ஒட்டுமொத்த நாட்டைப் போலவே மகாராஷ்டிர மாநிலத்தில் லாக் டவுன் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேல் சாலைகளில் நடைபயணமாக பிற மாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இந்த சூழலில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே இருக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Samayam Tamil புலம்பெயர் தொழிலாளர்கள்


குறிப்பாக மும்பை, நேவி-மும்பை, ரைகாத், தானே மற்றும் பால்கர் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டுமான இடங்களில் இருக்கும் சுமார் 80 ஆயிரம் பேர் அங்கேயே தொடர்ந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பிற மாநில அரசுகளுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அரசின் ஷிவ் போஜன் தாலி திட்டத்தில் ஏழைகளுக்கான உணவு ரூ.10ல் இருந்து ரூ.5ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டடங்கள் அனைத்தும் தொழிலாளர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறுகையில், புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்.

லாக் டவுனில் இப்படியொரு நெகிழ்ச்சி; ஓடி வந்த கைகொடுத்த முஸ்லீம்கள்- எதற்கு தெரியுமா?

உங்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் உள்ளிட்டவை லாக் டவுன் காலம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக 163 உணவு மையங்களை ஏற்பாடு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். கொங்கன் மண்டல ஆணையர் சிவாஜிராவ் தவுந்த் கூறுகையில், 40 ஆயிரம் பேருக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிட வசதியை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம்.

சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு என்.ஜி.ஓக்கள் உதவி செய்ய முன்வந்துள்ளன என்றார். தொழிலாளர் நல ஆணையர் மகேந்திர கல்யாண்கர் கூறுகையில், நேற்று பிற்பகல் வரை 56 ஆயிரத்து 84 கட்டுமான தொழிலாளர்களை கண்டறிந்துள்ளோம். இவர்கள் மும்பை, நேவி மும்பை, ரைகாத், தானே, பால்கர் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களை அங்கேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். வெளியேறியவர்களின் விவரங்கள் பற்றி விசாரித்து வருகிறோம் என்றார்.

அடுத்த செய்தி