ஆப்நகரம்

விரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!

ஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வது ஒருவரது அடிப்படை உரிமை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Samayam Tamil 30 Nov 2020, 11:31 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிய பெண் ஒருவர், இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு கோரி இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். அவரது இந்த அறிவிப்பையடுத்து, மத்தியப் பிரதேச மாநில அரசும், ஹரியாணா மாநில அரசும் இதேபோன்று சட்டம் இயற்றப்போவதாக தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்து மதத்தை சேர்ந்த தனது காதலி ரம்யாவை மீட்டுத்தருமாறு முஸ்லிம் மதத்தை சேர்ந்த வஜீத் கான் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மென்பொருள் பொறியாளாரான ரம்யா, மனுதாரரான தனது காதலரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேலும், மனுதாரரின் பெற்றோருக்கு இந்த திருமணாத்தில் சம்மதம் என்றும் தனது பெற்றோர் மட்டுமே இந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இதையடுத்து, இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை வயது வந்த ஒருவர் திருமணம் செய்து கொள்வது அவரது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்ததுடன், ரம்யா ஒரு மென்பொருள் பொறியாளராக இருப்பதால் அவரது வாழ்க்கை குறித்த முடிவை அவரால் எடுக்க முடியும் என்றும் தெரிவித்து, அவர் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டது.

லவ் ஜிகாத் என்று அழைக்கப்படும் முஸ்லின் ஆண்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கர்நாடக அரசு பேசிக் கொண்டிருக்கும் வேளையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அம்மாநில பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி